தீபாவளி பண்டிகைக்குச் சொந்த ஊர்களுக்குச் சென்று வருபவர்களுக்கான அரசு சிறப்புப் பேருந்து முன்பதிவு நாளை முதல் துவங்கவுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த பலர் வேலை செய்து வருகின்றனர்.
இவர்கள் முக்கிய பண்டிகை நாட்களில் தாங்கள் தங்கியிருக்கும் இடங்களிலிருந்து சொந்த ஊர்களுக்குச் சென்று திரும்புவது வழக்கம்.
அப்படி சொந்த ஊர்களுக்கு மக்கள் செல்லும் போது மக்கள் கடைசி நேரத்தில் பேருந்து மற்றும் ரயில் டிக்கெட்டுகள் கிடைக்காமல் தவிப்பவர்களும் உண்டு.
மேலும், இந்த சூழலைப் பயன்படுத்தி ஆம்னி பேருந்துகளும் டிக்கெட் விலைகளை ஏற்றிவிடுகிறது.
இதனால் மக்கள் வேறு வழியில்லாமல் அதிக விலையில் டிக்கெட் வாங்கி பயணம் செய்கின்றனர்.
இதற்குத் தீர்வாக அரசு தரப்பில் விழா நாட்களில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அடுத்த மாதம் 24 ஆம் தேதி தீபாவளி கொண்டாடப்படவுள்ளது.
இந்நிலையில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாகப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
சிறப்புப் பேருந்துகளில் அக்டோபர் 22 ஆம் தேதி பயணிப்பதற்கான முன்பதிவு நாளை (செப்டம்பர் 21)தொடங்குகிறது. www.tnstc.com என்ற என்ற இணையதளம் வாயிலாகப் பேருந்து டிக்கெட்களை முன்பதிவு செய்து கொள்ளலாம்.
இது குறித்து போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறியது, ‘‘30 நாட்களுக்கு முன்னரே அரசு விரைவு பேருந்துகளில் முன்பதிவு செய்யும் வசதி செய்யப்பட்டுள்ளது.
எனவே நாளை தொடங்கும் டிக்கெட் முன்பதிவு மூலம் 1,000 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
சென்னையிலிருந்து விழுப்புரம், சேலம், கும்பகோணம், கோவை, மதுரை, திருநெல்வேலி ஆகிய 6 போக்குவரத்துக் கழகங்களிலிருந்தும் பேருந்துகள் பெறப்பட்டு தீபாவளி டிக்கெட் முன்பதிவில் இணைக்கப்படும்’’ என்று கூறினர்.
மோனிஷா
ஆம்னி சாம்ராஜ்யத்தை சமாளிக்க அரசு பேருந்துகளில் புது சலுகை!
பாஜகவுடன் எந்த சமரசமும் இல்லை: மு.க.ஸ்டாலின்