மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர ஓய்வூதியத்தை 1,500 ரூபாயாக உயர்த்தி வழங்க தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதந்தோறும் வழங்கப்பட்டு வரும் ஓய்வூதியத்தை 1,000 ரூபாயில் இருந்து 1,500 ரூபாயாக உயர்த்தப்படுவதாக கடந்த 3ஆம் தேதி முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
இந்த நிலையில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர ஓய்வூதியத்தை 1,500 ரூபாயாக உயர்த்தி வழங்க தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
இதுகுறித்து சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் வெளியிட்டுள்ள அரசாணையில்,
‘சமூக நலன் மற்றும் சத்துணவு திட்ட துறையால் செயல்படுத்தப்பட்டு வரும் ஓய்வூதிய திட்டங்களின் கீழ் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் மாத ஓய்வூதியத்தை 500 ரூபாயில் இருந்து ரூ.1,000 ஆக உயர்த்தி 2011ஆம் ஆண்டு மே மாதம் முதல் நடைமுறைப்படுத்த ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
வருவாய் துறை மூலம் ஓய்வூதியம் பெற்று வரும் கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட 4 லட்சத்து 39,315 பேருக்கு, அவர்கள் தற்போது பெற்று வரும் ஓய்வூதியம் 1,000 ரூபாயில் இருந்து ரூ.1,500 ஆக வரும் ஜனவரி 1ஆம் தேதி முதல் உயர்த்தி வழங்கப்படும்.
இதன்மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.263 கோடியே 56 லட்சம் கூடுதல் செலவாகும்.
மேலும், தற்போது தமிழகத்தில் அரசு உதவித்தொகை பெற்று வரும் இந்திரா காந்தி தேசிய மாற்றுத்திறனுடையோர் ஓய்வூதிய திட்டம், மாற்றுத்திறனுடையோர் ஓய்வூதிய திட்டம் மற்றும் இலங்கை அகதிகளுக்கான மாற்றுத்திறனுடையோர் ஓய்வூதியம் பெற்று வரும் கண்பார்வையற்ற மாற்றுத்திறனுடையோர் உள்ளிட்டவர்களுக்கு வழங்கப்படும் வரும் மாத ஓய்வூதியத்தை 1,000ரூபாயில் இருந்து ரூ.1,500ஆக உயர்த்தி வழங்கவும், இது 2022டிசம்பர் முதல் நடைமுறைப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி ஜனவரி, 2023ல் பயனாளிகளுக்கு வழங்குவதற்கு முடிவு செய்து 65 கோடியே 89 லட்சத்து 72,500ரூபாய்க்கான நிதி ஒதுக்கீடு செய்து அரசு ஆணையிடுகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-ராஜ்
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!
கிச்சன் கீர்த்தனா: புத்தாண்டு முதல் ‘டயட்’டைக் கடைப்பிடிக்கப் போறீங்களா?