ஆதாரங்களாய் வந்த அழிக்கப்பட்ட போட்டோக்கள்! வேங்கைவயல் துப்பு துலங்கிய பின்னணி!

Published On:

| By vanangamudi

வேங்கை வயல் விவகாரத்தில் புதுக்கோட்டை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப் பத்திரிகை குறித்து கூடுதல் தகவல்கள் கிடைத்துள்ளன.

வேங்கை வயல் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரம் இந்திய அளவில் பெரும் பேசுபொருளானது. இந்த வழக்கில் கடந்த ஜனவரி 20 ஆம் தேதி புதுக்கோட்டை நீதிமன்றத்தில் மூவர்  மீது சிபிசிஐடி போலீஸ் தரப்பில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த குற்றப் பத்திரிகையில் எதன் அடிப்படையில் அந்த மூவர் மீது குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது என விசாரித்தபோது முக்கிய  மேலதிகக் கூறுகள் கிடைத்துள்ளன.

“புதுக்கோட்டை மாவட்டம் முத்துக்காடு பஞ்சாயத்தில் உள்ள வேங்கைவயல் கிராமத்தில் 10,000 லிட்டர் கொள்ளளவில் கட்டப்பட்ட மேல்நிலை நீர்தேக்கதொட்டியில் மலம் மிதந்ததாக கடந்த 26.12.2022 அன்று  கனகராஜ் என்பவர் புகார் கொடுத்தார்.

இந்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்டதில்  கடந்த 20.01.2025 அன்று புதுக்கோட்டை சிறப்பு நீதிமன்றத்தில்  எதிரிகள் 1 முரளிராஜா 32/23, த/பெ ஜீவானந்தம், வேங்கைவயல், 2 முத்துகிருஷ்ணன், 22/23, த/பெ கருப்பைய்யா வேங்கைவயல். 3 சுதர்சன், 20/23, த/பெ பாஸ்கரன், வேங்கைவயல் ஆகியோர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இவ்வழக்கில் முரளிராஜா என்பவரிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், சம்பவத்தன்று தான் பணிக்கு சென்றுவிட்டதாகவும் தனக்கு சம்பவம் பற்றி எந்த விபரமும் தெரியாது என தெரிவித்துள்ளார்.

மேலும்  சுதர்சன் என்பவரை விசாரணை செய்தும் அவரது செல்போனை கைப்பற்றி தடய அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பியும் ஆய்வு அறிக்கை பெறப்பட்டது.

அந்த ஆய்வு அறிக்கையில் சம்பவத்தன்று நீர்தேக்க தொட்டியின் மேலிருந்து அவரது போனில் எடுக்கப்பட்ட போட்டோக்கள், வீடியோக்கள் மற்றும் ஆடியோக்கள் அழிக்கப்பட்டிருந்தன. தடய அறிவியல் ஆய்வகத்தின் மூலம் போட்டோக்கள் மீட்கப்பட்டு அவற்றை ஆய்வு செய்தததில் கீழ்க்கண்ட விபரங்கள் தெரியவந்தது.

26.12.2022 ம் தேதி காலை  07.34.59 மணிக்கு தண்ணீர் தொட்டி முழுவதும் நீரால் நிரப்பப்பட்டு தண்ணீரில் எவ்வித மலத்துண்டுகளும் இல்லாமல் சுத்தமாக இருந்தது.

07.35.21 மணிக்கு முத்துக்கிருஷ்ணன் மற்றும் சுதர்சன் ஆகிய இருவரும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மேலே செல்பி எடுத்துக்கொண்ட போட்டோ பதிவு.

07.35.22 மணிக்கே வெள்ளை நிற பிளாஸ்டிக் கவரில் மனித மலம் உள்ள புகைப்படம்.

07.53.04 மணிக்கு முரளிராஜா தண்ணீர் டேங்க் மேலே உட்கார்ந்துகொண்டும் சுதர்சன் வீடியோ எடுத்துக்கொண்டும் முத்துக்கிருஷ்ணன் சிரித்துக்கொண்டும் உள்ள வீடியோவில் வெள்ளை நிற பிளாஸ்டிக் கவரில் மலம் உள்ளது. அப்போதும் நீர்தேக்க தொட்டியில் மலம் மிதக்கவில்லை. ஆனால் அச்சமயத்தில் முரளிராஜா நீரில் இருந்த மலத்தை சேகரித்ததாக உண்மைக்கு புறம்பாக கூறுகிறார்.

பின்பு முத்துக்காடு பஞ்சாயத்து தலைவரின் கணவர் முத்தையாவின் செல்போனில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் 09.24 மணிக்கு எடுக்கப்பட்ட போட்டோவில் ஒரே ஒரு மலத்துண்டு மட்டும் இருந்துள்ளது.

மேற்கண்ட நீர்த்தேக்க தொட்டியில் சுதர்சனால் எடுக்கப்பட்ட போட்டோக்களில் உள்ள தண்ணீரில் எவ்விதமான மலத்துண்டுகளும் இல்லை. இவர்கள் இறங்கி வந்த பின்புதான் தண்ணீரில் மலத்துண்டு இருந்துள்ளது.

பின்னர் மீண்டும் முரளிராஜா நீர்தேக்க தொட்டியின் மேலே ஏறி சென்று 09.27 மணிக்கு தனது செல்போனில் எடுத்த போட்டோவிலும் ஒரு துண்டு மலம் புதிதாக கிடக்கிறது.

முரளிராஜா நீர்தேக்க தொட்டியின் மேலே ஏறி சென்று 09.27 மணிக்கு தனது செல்போனில் எடுத்த போட்டோ

ஆகவே முரளிராஜா, முத்துக்கிருஷ்ணன் மற்றும் சுதர்சன் ஆகியோர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் எடுக்கப்பட்ட போட்டோக்களில் உள்ள தண்ணீரில் எவ்விதமான மலத்துண்டுகளும் இல்லை. இவர்கள் இறங்கி வந்த பின்புதான் தண்ணீரில் மலத்துண்டு இருந்துள்ளது.

சம்பவத்தன்று காலை 05.00 மணி முதல் மோட்டார் மூலம் நீர்தேக்க தொட்டிக்கு நீர் ஏற்றப்பட்டு காலை 07.30 மணியளவில்தான் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. வல்லுநர்களின் கூற்றுப்படியும் பரிட்சாத்த செய்முறை நடத்தியதன்படியும் 26.12.2022-ம் தேதி காலை 05.00 மணிக்கு முன்பு தண்ணீரில் மலம் போட்டிருந்தால் தண்ணீர் விழும் வேகத்தில் தொட்டிக்குள் இருந்த மலம் சிதறிக் கரைந்திருக்கும். அவ்வாறு இல்லாமல் ஒரு மலத்துண்டு மட்டும் மிதந்து கொண்டிருந்தால் தண்ணீர் ஏற்றுவது நிறுத்திய பின்புதான் போடப்பட்டுள்ளது என்பது தெரிய வருகிறது.

மேலும் சுதர்சனின் செல்போனில் இருந்து தடய அறிவியல் ஆய்வகத்தால் எடுக்கப்பட்ட ஆடியோ பதிவில் அவரது அம்மா சுலோச்சனா மற்றும் அத்தை வள்ளிகண்ணு ஆகியோரிடம் அவர் பேசிய ஆடியோ குரல்கள்  கிடைத்துள்ளன. இதுகுறித்து அவர்களுடைய  குரல் மாதிரி பரிசோதனைக்கு உட்படுத்தி அறிக்கை பெற்றதில் அதில் உள்ள குரல்கள் மேற்கண்ட நபர்களுடையதுதான் என்று நிரூபணம் செய்யப்பட்டுள்ளது.

மேற்கண்ட ஆடியோ பதிவில் சுதர்சனின் அம்மா சுலோச்சனா, “எதையும் போலீஸிடம் ஒத்துக்கொள்ள கூடாது” என்று கூறுவதும் சுதர்சன் தனது அத்தை திருமதி வள்ளிகண்ணுவிடம் பேசிய ஆடியோ பதிவில் “போலீஸ் கண்டுபிடித்துவிட்டார்கள். ஆனால், சொல்லமாட்டறாங்க” எனவும் “முரளிராஜாவின் வேலைக்கு ஏதும் பிரச்சினையா” என்று கேட்பதும் அதற்கு சுதர்சன், “அதுக்குதான் முரளி அண்ணன் பயப்படுறாங்க” என்று பதில் சொல்வதும் தெரியவருகிறது.

மேலும், முரளிராஜா என்பவரின் செல்போனில் கிடைக்கப்பெற்ற ஆடியோ பதிவுகளை ஆய்வு செய்ததில் முரளிராஜா மற்றும் கண்ணதாசன் ஆகியோருக்கிடையேயான உரையாடலில் முரளிராஜா கண்ணதாசனிடம் பதாகைகளை தயார் செய்யுமாறும் தங்களுடைய சுவற்றில் தாங்களே ஒடுக்கப்பட்ட பகுதி மற்றும் தாழ்த்தப்பட்ட பகுதி என்று எழுதி பிரச்சினை ஏற்படுத்தவும் முற்பட்டது உண்மை என தெரியவருகிறது.

மேற்கண்ட ஆடியோ பதிவு குரல் பரிசோதனை செய்து தடய அறிவியல் ஆய்வக அறிக்கையில் மேற்கண்ட உரையாடலில் உள்ள குரல்கள் முரளிராஜா மற்றும் கண்ணதாசனுடையதுதான் என நிரூபணம் செய்யப்பட்டுள்ளது.

மேலும், வேங்கைவயல் மக்கள் இம்மலம் கலந்த நீரை பருகியதால் உடல்நலக்குறைபாடு ஏற்பட்டது என கூறியதின் பேரில் நடத்தப்பட்ட விசாரணையில், பாதிக்கப்பட்டவர்களின் உடல் நலக்கோளாறுகள் லெப்டோஸ்பரைசிஸ் நோய் தொற்றினாலும் சுவாச பாதை நோய் தொற்றினாலும் மற்றும் பிற காரணங்களாலும் பாதிக்கப்பட்டனர் என தெரியவருகிறது.

ஆகவே, தடய அறிவியல் ஆய்வத்தின் அறிக்கையிலிருந்தும் மற்றும் இதர அறிக்கைகளிருந்தும் வேங்கைவயலை சேர்ந்த  முரளிராஜா, சுதர்சன் மற்றும் முத்துகிருஷ்ணன் ஆகியோர் குற்ற செயலில் ஈடுப்பட்டார்கள் என தெரியவருகிறது” என்கிறார்கள் விசாரணை வட்டாரங்களில்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share