அதிக வட்டி ஆசை: சென்னையில் ரூ. 900 கோடி மோசடி!

Published On:

| By Kalai

அதிக வட்டி தருவதாக கூறி பொதுமக்களிடம் வசூல் செய்து 900 கோடி அளவில் மோசடி செய்த மேலும் ஒரு நிறுவனம் மீது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அதிக வட்டி தருவதாகக் கூறி மோசடி செய்யும் நிறுவனங்களை கண்காணித்து, அவற்றின் மீது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

அந்த அடிப்படையில், ஐஎப்எஸ், ஆருத்ரா உள்ளிட்ட நிறுவனங்கள் ரூ. 10,000 கோடி மோசடி செய்ததாக அண்மையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டனர்.

இதன் தொடர்ச்சியாக சென்னையை தலைமையிடமாகக் கொண்ட  ஹிஜாவு என்ற நிறுவனத்தின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஒரு லட்ச ரூபாய் கொடுத்தால் மாதம் 15 ஆயிரம் ரூபாய் வட்டி தருவதாக கூறி ஆயிரக்கணக்கான பேரிடம் பணம் வசூல் செய்யப்பட்டு இருக்கிறது.

ஆனால் கடந்த சில மாதங்களாக வட்டி தராமல் மோசடி செய்த ஹிஜாவு குழுமத்தின் மீது அசோக் நகர் பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் புகார் அளித்திருந்தனர்.

புகாரின் அடிப்படையில் ஹிஜாவு குழுமத்தின் தலைவர் சௌந்தரராஜன் மற்றும் நிர்வாக இயக்குனர் அலெக்சாண்டர் மீதும், இந்த நிறுவனத்தை நடத்திய நிர்வாகிகள் மீதும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

குறிப்பாக மலேசியா உள்ளிட்ட நாடுகளில் எண்ணெய் கிணறு வைத்திருப்பதாகவும், மக்களிடம் வசூலிக்கும் பணத்தை அந்த நிறுவனங்களில் முதலீடு செய்து லாபம் பார்ப்பதாகவும் கூறி மோசடியில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

சுமார் ஒரு லட்சம் பேர் வரை இந்த நிறுவனத்தில் முதலீடு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.

தற்போது ஹிஜாவு நிறுவனத்தின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் நேரடியாகவோ, ஈமெயில் மூலமாகவோ புகார் அளிக்கலாம் என்று பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.

கலை.ரா

“கடவுள் பெயரை சொல்லி தப்பிக்கமாட்டோம்” – மா.சுப்ரமணியன்

10 நாட்களில் ஹிட்டடித்த ‘ரஞ்சிதமே’!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel