தமிழகத்தில் கடலூர், கும்பகோணம், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் புதுச்சேரியில் இன்று (செப்டம்பர் 14) 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
’ஏடிஎஸ்’ கொசு வகையால் ஏற்படும் டெங்கு காய்ச்சல் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. சமீபத்தில் சென்னை மதுரவாயலை சேர்ந்த 4 வயது சிறுவன் டெங்கு காய்ச்சல் காரணமாக உயிரிழந்தார்.
இதனால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். சுகாதாரத்துறை சார்பிலும் மக்களுக்கு டெங்கு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடலூரில் 6 பேருக்கும் கும்பகோணத்தில் 3 பேருக்கும் டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் வண்டிப்பாளைம், மஞ்சக்குப்பம், முட்டம், பண்ருட்டியைச் சேர்ந்த 4 பெண்கள், 2 ஆண்கள் என மொத்தம் 6 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த 6 பேரும் கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கும்பகோணம் அரசு பொது மருத்துவமனையில் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்ட 26 பேரில் 3 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுக்கோட்டையில் ஒரே நாளில் 5 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
புதுச்சேரியில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த 2 பேர் இன்று உயிரிழந்தனர். மேலும் 44 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மோனிஷா
நிபா வைரஸ் எதிரொலி: இரண்டு நாட்கள் விடுமுறை அறிவிப்பு!
ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் வேலை நிறுத்தம்: பணிகள் முடங்கின!