செக் குடியரசு நாடுகளில் கடும் நிலக்கரி தட்டுப்பாடு நிலவி வருகிறது. கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி தொடங்கிய ரஷ்யா – உக்ரைன் போரானது 120 நாட்களை தாண்டி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதனால் உலகில் பல நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்த வருகின்றன. இதைத் தொடர்ந்து ரஷ்ய நிலக்கரியை ஐரோப்பிய ஒன்றியம் தடை செய்தது. இதனால் செக் குடியரசு நாடுகளில் கடும் நிலக்கரி தட்டுப்பாடு நிலவி வருகிறது.
செக் குடியரசு தனது நிலக்கரி சுரங்கங்களில் பணியை நிறுத்தி வைக்க திட்டமிட்டிருந்தது. ஆனால், தற்போது அங்கு நிலவும் நிலக்கரி தட்டுப்பாட்டினால் நிலக்கரி சுரங்கங்களில் பணியைத் தொடரும் நிலை ஏற்பட்டுள்ளது. வருகிற 2023ஆம் ஆண்டுக்குள் செக் குடியரசில் நிலக்கரி உற்பத்தியை படிப்படியாக நிறுத்துவது என்று முடிவெடுக்கப்பட்டது. மேலும் நாட்டில் அணுசக்தி உற்பத்தியை அதிகரிக்க திட்டங்கள் வகுக்கப்பட்டு வந்தன.
செக் குடியரசின் மொத்த மின் உற்பத்தியில் பாதி நிலக்கரி மூலமாகவே உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த நிலையில் அங்கு ஏற்பட்டிருக்கும் கடும் நிலக்கரி தட்டுப்பாட்டால் வேறு வழியின்றி நிலக்கரி சுரங்கங்களில் பணியைத் தொடர செக் குடியரசு முடிவெடுத்துள்ளது.

இதுகுறித்து செக் குடியரசு நாட்டின் நிதியமைச்சர் கூறுகையில், “ரஷ்யா மீது விதிக்கப்பட்டிருக்கும் பொருளாதாரத் தடைகளால், செக் குடியரசில் ரஷ்யாவில் இருந்து நிலக்கரியை இறக்குமதி செய்ய முடியவில்லை. செக் குடியரசு தனது மின்சாரத்துக்கு நிலக்கரியைப் பெருமளவில் நம்பி இருக்கிறது. இந்த நிலையில் வரும் 2023ஆம் ஆண்டுக்குள் நாட்டில் நிலக்கரி உற்பத்தியை படிப்படியாக நிறுத்துவது என்று திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், தற்போது உள்ள சூழலை சமாளிக்க வேறு வழியின்றி நிலக்கரி சுரக்கங்களில் பணியைத் தொடர செக் குடியரசு முடிவு செய்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.