பட்டாசு ஆலை விபத்து: முதல்வர் நிதியுதவி!

தமிழகம்

காஞ்சிபுரம் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ. 3 லட்சம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

காஞ்சிபுரம் அருகே குருவி மலையில் உள்ள பட்டாசு ஆலையில் இன்று (மார்ச் 22) திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் படுகாயம் ஏற்பட்டு சம்பவ இடத்தில் 5 பேரும், மருத்துவமனையில் 4 பேரும் என இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், படுகாயம் அடைந்த 7 பெண்கள் உட்பட 15 தொழிலாளர்கள் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையிலும், 4 பேர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையிலும் தீவிர சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், காஞ்சிபுரம் பட்டாசு ஆலை வெடி விபத்தில் 9 பேர் உயிரிழப்புக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு நிதியுதவி அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று (மார்ச் 22 ) வெளியிட்டுள்ள அறிக்கையில் , “ காஞ்சிபுரம் மாவட்டம் ஓரிக்கை கிராமப் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான வெடிபொருள் சேமிப்புக் கிடங்கில் இன்று எதிர்பாராத விதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் பூபதி (வயது 57), முருகன் (வயது 40), சசிகலா (வயது 35),தேவி (வயது 32), சுதர்சன் (வயது 31), வித்யா (வயது 30) மற்றும் அடையாளம் காணமுடியாத மூன்று நபர்கள் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

மேலும், இவ்விபத்தில் கடும் காயமடைந்து உயர் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் மற்றும் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்க அறிவுறுத்தியுள்ளேன்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 3 இலட்சம் ரூபாயும், கடும் காயமடைந்தவர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாயும், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்”. என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

ஆஸ்திரேலியா அதிரடி… தொடரை வெல்லுமா இந்தியா?

உயரும் பலி எண்ணிக்கை: பட்டாசு ஆலை உரிமையாளர் கைது!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0