சிவகாசி அருகே ஊராம்பட்டி பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா மூன்று லட்சம் ரூபாய் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று(மே18) உத்தரவிட்டுள்ளார்.
சிவகாசி அருகே பள்ளப்பட்டியில் பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் 40-க்கும் மேற்பட்ட அறைகளில் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இங்கு சங்கு சக்கரம், புஸ்வாணம் உள்ளிட்ட பேன்சி ரக வெடிகள் உற்பத்தி செய்யப்படுகிறது.
இந்த ஆலையில் இன்று வழக்கம் போல் தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பிற்பகல் 12 மணி அளவில் மருந்து கலவை செய்யும் அறையில் பட்டாசு மூலப் பொருட்களை கலவை செய்யும்போது உராய்வு காரணமாக திடீர் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில், அந்த அறை முற்றிலும் இடிந்து தரைமட்டமானது.
அருகில் இருந்த மற்றொரு அறையும் சேதமடைந்தது. இதில் அந்த அறையில் பணிபுரிந்த மம்சாபுரத்தை சேர்ந்த குமரேசன், பள்ளபட்டியை சேர்ந்த சுந்தர் ராஜ் , ரிசர்வ் லைன் சிவன் காலனியை சேர்ந்த அய்யம்மாள் ஆகியோர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், ஊராம்பட்டி பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், நிதி உதவி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று(மே18) வெளியிட்டுள்ள அறிக்கையில், விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே ஊராம்பட்டி கிராமத்தில் இயங்கி வந்த தனியாருக்குச் சொந்தமான பட்டாசு தொழிற்சாலையில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில்,
குமரேசன், சுந்தர்ராஜ், மற்றும் அய்யம்மாள் ஆகிய மூன்று பேர் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.
மேலும், இவ்விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் திருமதி. இருளாயி என்பவருக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க அறிவுறுத்தியுள்ளேன்.
உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த
இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று இலட்சம் ரூபாயும்,
காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறும் இருளாயி-க்கு ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்” என்று கூறியுள்ளார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
தோனி குறித்து மனம் திறந்த கே.எல்.ராகுல்
ஜல்லிக்கட்டு தீர்ப்பு…ஓபிஎஸ் பெருமிதம்!