பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருப்பதாகக் கூறி சென்னையில் 4 பேரின் வீடுகளில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை அமைப்பு விசாரணை நடத்தி வரும் நிலையில், இந்த வழக்கு தொடர்பாக கடந்த 10 ஆம் தேதி
சென்னை, கோயம்புத்தூர் உள்ளிட்ட 43 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி பல முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.
சென்னை மாநகர போலீசாரும் தனியாக சோதனை நடத்தினர். இந்நிலையில் தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு போலி பாஸ்போர்ட், சிம்கார்டு போன்றவற்றை வழங்கி,
பணப் பரிவர்த்தனைகள் மேற்கொண்டு அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டதாக மத்திய உள்துறை அமைச்சகம் பட்டியல் ஒன்றை தயார் செய்து தமிழக காவல் துறைக்கு அனுப்பியிருந்தது.
அதில் சென்னையில் 18 நபர்கள் தடை செய்யப்பட்ட இயக்கங்களுடன் தொடர்பில் இருந்திருப்பது தெரியவந்தது.
இது தொடர்பாக ஏற்கனவே கடந்த 14 ஆம் தேதி தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவாக செயல்பட்டதாக,
பட்டியலில் உள்ள 4 பேரின் வீடுகளில் சென்னை போலீசார் சோதனை மேற்கொண்டு 120 முக்கிய ஆவணங்களையும், 10 லட்சம் ரூபாய் ( வெளிநாட்டு பணம் உட்பட) ரொக்க பணத்தையும் பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில் இன்று(நவம்பர் 19) மீண்டும் சென்னை மாநகர போலீசார் 4 பேரின் வீடுகளில் சோதனை மேற்கொண்டனர்.
சென்னை ஓட்டேரி எஸ்.எஸ் புரத்தில் சாகுல் ஹமீது என்பவரது வீடு, வேப்பேரி – பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள எஸ்.எம் புஹாரி என்பவரது வீடுகளில் சென்னை மாநகர போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
அதேபோல ஏழு கிணறு பகுதியில் பிடாரியார் கோவில் தெருவில் உள்ள உமர் முக்தார் மற்றும் வி.வி.எம் தெருவில் உள்ள முகமது ஈசாக் கவுத் ஆகியோரது வீடுகளிலும் இந்த சோதனையானது நடைபெற்றது.
பயங்கரவாத இயக்கங்களுடன் இவர்கள் தொடர்பில் உள்ளனரா என்ற சந்தேகத்தின் அடிப்படையில் சோதனை நடைபெறுவதாக சென்னை போலீசார் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பத்து நாட்களில் மூன்றாவது முறையாக சோதனை நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோன்று திருச்சியிலும் 2 பேர் வீடுகளில் சோதனை நடைபெற்றுள்ளது.
கலை.ரா
பிரியா மரணம்: களமிறங்கும் தனிப்படை!