தேசிய தொழில் பழகுநர் சேர்க்கை முகாம் ஜனவரி 20-ம் தேதி கோவையில் நடக்கிறது என்று கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி அறிவித்துள்ளார்.
தேசிய தொழில் பழகுநர் ஊக்குவிப்புத் திட்டத்தின் கீழ் தமிழக அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பாக மாவட்ட அளவில் பிரதம மந்திரியின் தேசிய தொழிற் பழகுநர் சேர்க்கை முகாம் ஒவ்வொரு மாவட்டத்திலும் நடந்து வருகிறது. இதில் பங்கேற்று தேர்வு பெற்றால் தொழில் பழகுநர் பயிற்சி அளிக்கப்பட்டு மத்திய அரசின் தேசிய தொழில் பழகுநர் சான்றிதழ் வழங்கப்படும்.
தேசிய தொழில் பழகுநர் சான்றிதழ் பெற்றவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமையும் வயது வரம்பில் மேலும் ஓராண்டு சலுகையும் உள்ளது. மேலும், வெளிநாட்டு வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை கிடைக்கும். மேலும், தொழில் பழகுநர் பயிற்சியின்போது உதவித்தொகை, தொழிற்பிரிவுகளுக்கு ஏற்ப தொழில் நிறுவனங்களால் வழங்கப்படுகிறது.
இந்த நிலையில் கோவை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் தேசிய தொழில் பழகுநர் சேர்க்கை முகாம் ஜனவரி 20-ம் தேதி நடக்கிறது.
அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற இம்முகாமில் மத்திய மாநில அரசு நிறுவனங்கள் பொதுத்துறை நிறுவனங்களும் மற்றும் கோவை மாவட்டத்திலுள்ள தனியார்துறை நிறுவனங்கள் பங்கேற்று 300-க்கும் மேற்பட்ட காலியிடங்களை நிரப்ப உள்ளனர்.
பத்தாம் வகுப்பு தேர்ச்சி முதல் பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி, தோல்வி அடைந்தவர்கள் மற்றும் அரசு, தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் என்சிவிடி, எஸ்சிவிடி தேர்ச்சி பெற்றவர்கள் உரிய அசல் சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களுடன் பங்கேற்கலாம்.
மேலும், விவரங்களுக்கு உதவி இயக்குநர், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகம் கோவை-29 என்ற முகவரியிலும் 95665 31310, 94864 47178 ஆகிய எண்களிலும் தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ராஜ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டாப் 10 நியூஸ்: காணும் பொங்கல் முதல் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு வரை!