கோ-ஆப்டெக்ஸில் தீபாவளி விற்பனை: சிறப்பு தள்ளுபடி எவ்வளவு?
கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி-2023ஐ முன்னிட்டு 30 சதவிகிதம் சிறப்பு தள்ளுபடி விற்பனையை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் தொடங்கி வைத்துள்ளார்.
கோ-ஆப்டெக்ஸ் விற்பனை குறித்து பேசிய அவர்,
“தமிழக அரசின் கூட்டுறவு நிறுவனமான கோ-ஆப்டெக்ஸ் கடந்த 89 வருடங்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தமிழக நெசவாளர்களால் உற்பத்தி செய்யப்படும் ரகங்களை கொள்முதல் செய்து,
இந்தியா முழுவதும் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் மூலம் சந்தைப்படுத்தி நெசவாளர்களுக்கு தொடர் வேலைவாய்ப்பு நல்கி அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி வருகிறது.
இந்த நிறுவனம் பாரம்பரியமிக்க பட்டு ரகங்களான காஞ்சிபுரம், ஆரணி, சேலம், கோவை மென்பட்டு, திருபுவனம், ராசிபுரம்,
முதலிய பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் பட்டு சேலைகளை வாடிக்கையாளர்கள் விரும்பும் வகையில் காலத்துக்கேற்ப புதிய வடிவமைப்புகளில் உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகிறது.
வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு விற்பனைக்காக கைத்தறி ரகங்களுக்கு 30 சதவிகிதம் அரசு சிறப்பு தள்ளுபடி வழங்குகிறது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதிய வடிவமைப்புகளில் உற்பத்தி செய்யப்பட்ட பட்டு மற்றும் பருத்தி சேலைகள், இயற்கை சாயமிட்ட ஆர்கானிக் சேலைகள், போர்வைகள், படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள், வேட்டிகள், லுங்கிகள், துண்டு ரகங்கள், திரைச்சீலைகள்,
ரெடிமேட் சட்டைகள், சுடிதார் ரகங்கள், குர்தீஸ் வகைகள் பலதரப்பட்ட நவீன பைகள், குல்ட் ரகங்கள் மற்றும் ஏற்றுமதி தரம் வாய்ந்த ஹோம் பர்னிசிங் ரகங்கள் என ஏராளமாக தருவிக்கப்பட்டுள்ளன.
மேலும் அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வட்டியில்லாத சுலப தவணையின் மூலம் கடன் விற்பனை உண்டு.
மேலும் கோ-ஆப்டெக்ஸ் மாதாந்திர சேமிப்பு திட்டத்தின் மூலம் அதிக வாடிக்கையாளர் பயன்பெறும் வகையில் ரூ.300 முதல் ரூ.3000 வரை மாதாந்திர சேமிப்பு திட்டத்தில் இணையும் வசதியும் உள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் புதிய விற்பனை நிலையம் மற்றும் உடுமலைப்பேட்டையில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் மூலம் சுமார் ரூ.2 கோடி விற்பனை இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
ராஜ்
கிச்சன் கீர்த்தனா: சுண்டைக்காய் பொடிமாஸ்
ஆஸியை அடித்து நொறுக்கிய இந்தியா… ஒரே நாளில் ’ஓஹோ’ சாதனைகள்!