மாளிகை மேட்டில் நடந்து வரும் 3-ம் கட்ட அகழாய்வின் போது சீன நாட்டைச் சார்ந்த உடைந்த பீங்கான் துண்டு கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று (ஜூன் 28) தெரிவித்துள்ளார்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கங்கைகொண்ட சோழபுரம், மாளிகை மேடு ஆகிய பகுதிகளில் தற்போது 3-ம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதில், 11-ம் நூற்றாண்டில் தமிழ்நாட்டிற்கும், சீன நாட்டிற்கும் உள்ள வணிகத் தொடர்பை உறுதி செய்யும் வகையில் சீன பானை ஓடுகள், காசு வார்ப்பு, சுடுமண்ணால் அலங்கரிக்கப்பட்ட அச்சு முத்திரை ஆகிய 3 பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தனது ட்விட்டர் பக்கத்தில், “அலைகடல் நடுவில் கலம் பல செலுத்திப் பூர்வ தேசமும், கங்கையும், கடாரமும் கொண்ட, தமிழ் நாட்டின் பெருமைக்குரிய பெருவேந்தன் இராஜேந்திர சோழனின் அரண்மனை அமைந்திருந்த கங்கை கொண்ட சோழபுரம், மாளிகை மேடு பகுதியில் தமிழ் நாடு அரசின் தொல்பொருள் துறை தொடர்ந்து அகழ்வாய்வினை மேற்கொண்டு வருகின்றது.
இதுவரை சோழர் கால அரண்மனையின் பல அடித்தளப் பகுதிகள் வெளிக்கொணரப்பட்டு , அக்காலகட்டத்தைச் சார்ந்த பல்வேறு அரும்பொருட்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், தற்போது சீன நாட்டைச் சார்ந்த உடைந்த பீங்கான் துண்டு ஒன்றும், காசுகளை உருவாக்கப் பயன்படும் அச்சு மற்றும் சுடுமண்ணால் ஆன முத்திரை ஆகியனவும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

பொது யுகத்திற்குப் பின்னர் பதினொன்றாம் நூற்றாண்டில், தமிழ் நாட்டினுடனான சீன வணிகத் தொடர்புகளுக்கும், அன்றைய செலாவணியில் இருந்த பலவகையான காசுகளை உருவாக்கும் அக்க சாலைகள் அமையப்பெற்றிருந்தமைக்கும், அரசின் நடைமுறைகளில் பின்பற்றப்பட்ட அரச முத்திரைகள் குறித்தும் தெரிவிக்கும் தரவுகளாக இவை அமைந்துள்ளன என்பது குறிப்பிடத் தக்கதாகும்.” என்று தெரிவித்துள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா
ஏழை மக்களை காக்கும் குடியிருப்பாக மாறியுள்ளது ஜார்ஜ் கோட்டை: முதல்வர்