உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய புஸ்ஸி ஆனந்தை புதுச்சேரி முதல்வர் நேரில் சென்று நலம் விசாரித்தார்.
விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இயக்கத்தின் செயல்பாடுகள் மட்டுமின்றி விஜய் படங்களின் நிகழ்ச்சிகளுக்கான பணிகளையும் செய்து வருகிறார்.
அந்தவகையில் சமீபத்தில் வெளியான லியோ படத்தின் வெற்றி விழா நிகழ்ச்சி கடந்த 1ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது.
இதற்காக 3 நாட்கள் இரவு பகல் பாராமல் தூங்காமல் வேலை செய்திருக்கிறார் புஸ்ஸி ஆனந்த். இதனால் லியோ சக்சஸ் மீட் அன்றே அவருக்கு மயக்கம் வந்திருக்கிறது.
இதையடுத்து அவர் சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை தாய்லாந்துக்கு படப்பிடிப்புக்கு செல்வதற்கு முன்னதாக நடிகர் விஜய் நேரில் சென்று நலம் விசாரித்துவிட்டு, சில நாட்கள் ஓய்வில் இருக்குமாறு அறிவுறுத்திவிட்டு சென்றார்.
இந்தநிலையில், புஸ்ஸி ஆனந்த் சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பினார். அவரை புதுச்சேரி முதல்வரும், என்.ஆர்.காங்கிரஸ் தலைவருமான ரங்கசாமி நேரில் சென்று நலம் விசாரித்தார்.
தான் எடுத்துச் சென்ற கோயில் பிரசாதத்தை புஸ்ஸி ஆனந்திடமும், அவரது மனைவியிடமும் வழங்கிய முதல்வர் ரங்கசாமி, திருநீறை இருவரது நெற்றியிலும் வைத்துவிட்டார்.
அப்போது புஸ்ஸி ஆனந்த், ரங்கசாமியின் காலில் விழுந்து ஆசி பெற்றார். இதையடுத்து சிறிது நேரம் புஸ்ஸி ஆனந்துடன் உரையாடிவிட்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றார் முதல்வர் ரங்கசாமி.
நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதற்கான வேலையில் இறங்கியிருக்கும் நிலையில், புஸ்ஸி ஆனந்தை ரங்கசாமி நேரில் சென்று சந்தித்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
Comments are closed.