“44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி பல வகைகளிலும் முதன்மையானதாக நினைவு கூறப்படும்” என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இன்று (ஜூலை 28) நடைபெற்ற 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். பின்னர் இந்த நிகழ்வில் பேசிய அவர், “வணக்கம். தமிழகத்தின் தாயகமான சதுரங்க போட்டி இந்தியாவில் நடைபெற இருப்பது பெருமைக்குரியது. இந்தியா 75வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் நேரத்தில் செஸ் விளையாட்டு நடைபெறுவது பெருமைதரும் நிகழ்வாகும்.
செஸ் விளையாட்டுப் போட்டியை ஏற்பாடு செய்த அமைப்பினை நான் பாராட்டுகிறேன். மிக துல்லிய காலத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான ஏற்பாடுகளை அற்புதமாக செய்துள்ளது தமிழ்நாடு அரசு” என்றார்.
இடையில், ”இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு” என்ற திருக்குறளுக்கு மேற்கோள் காட்டிய அவர், “இருப்பதை வைத்து இல்வாழ்க்கை வாழ்வது, விருந்து கொடுப்பது போன்றவை விவசாயிகளின் பொருட்டே வந்தவை” என்றார்.

மத்திய அரசு உதவி செய்யும்!
தொடர்ந்து பேசிய அவர், ”நமது கலாசாரத்தில் விளையாட்டு எப்போதும் புனிதமாகவே கருதப்பட்டு வந்துள்ளது. இந்த தமிழ்நாட்டில் திருப்பூவனூரில் சதுரங்க வல்லவநாதர் கோயில் அமைந்துள்ளது. இளவரசியுடன் கடவுள் சதுரங்கம் ஆடினார் என்பது சதுரங்க வல்லவநாதர் கோயிலின் தலபுராணமாகும். சதுரங்க விளையாட்டுடன் தமிழ்நாட்டுக்கு மிக வலுவான தொடர்புள்ளது என்பது இதன்மூலம் நிரூபணமாகிறது. அதனால்தான் தமிழ்நாடு இந்தியாவின் சதுரங்க கோட்டையாக திகழ்கிறது. கடந்த 30 ஆண்டுகளில் முதல்முறையாக தற்போதுதான் ஆசியாவில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுகிறது. தமிழ்நாட்டுக்கு வரலாற்றுரீதியாக செஸ் விளையாட்டுடன் தொடர்புள்ளது. தமிழ்நாட்டில் கோயில் சிற்பங்கள் பல விளையாட்டுகளைப் பிரதிபலிக்கின்றன. வீரர்கள் தங்களுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் வகையில் அனைத்து உதவிகளையும் மத்திய அரசு அளித்துள்ளது.
வீரர்கள் திருப்தியடையும் வகையில் அனைத்து வசதிகளையும் மத்திய அரசு செய்யும். 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி பல வகைகளிலும் முதன்மையானதாக நினைவு கூறப்படும். 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில்தான் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகளவில் அணிகள் பங்கேற்றுள்ளன. செஸ் மகளிர் பிரிவிலும் அதிக எண்ணிக்கையில் பங்கேற்பது இந்த ஒலிம்பியாட் போட்டியில்தான். செஸ் ஒலிம்பியாட் போட்டியில் ஜோதி ஓட்டம் என்பதும் தற்போதுதான் முதல்முறையாக நடைபெறுகிறது” என்றார்.
ஜெ.பிரகாஷ்