“பரந்தூரில் அமையவிருக்கும் புதிய விமான நிலையம் தமிழக வளர்ச்சியின் படிக்கட்டு” என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னையின் இரண்டாவது விமான நிலையம் அமைப்பதற்கான முயற்சியில் மத்திய, மாநில அரசுகள் இறங்கியது. இதற்கான இடங்களின் பட்டியலில் காஞ்சி மாவட்டம் பரந்தூர் தேர்வு செய்யப்பட்டு, மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது. பரந்தூரில் அமையவிருக்கும் புதிய விமான நிலையம், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு படிக்கட்டாக இருக்கும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஆகஸ்ட் 2) அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர், “பரந்தூரில் அமையவுள்ள விமான நிலையம் 10 கோடி பயணிகளை கையாளக்கூடிய திறனுடையதாக அமைக்கப்பட உள்ளது. 2 ஓடுதளங்கள், விமான நிலைய முனையங்கள், இணைப்புப் பாதைகள், விமானங்கள் நிறுத்துமிடம், சரக்கு கையாளும் முனையம், விமான பராமரிப்பு வசதிகள் மற்றும் தேவையான இதர உட்கட்டமைப்பு வசதிகளுடன் புதிய விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது.
விமான திட்ட அறிக்கை தயாரித்தபின் புதிய விமான நிலையத்திற்கான திட்டமதிப்பீடு இறுதி செய்யப்படும். தற்போதைய உத்தேச திட்டமதிப்பு 20 ஆயிரம் கோடி.
பரந்தூரில் அமையவிருக்கும் புதிய விமான நிலையத் திட்டத்தைச் செயல்படுத்துவது என்பது நமது மாநிலத்தின் வளர்ச்சிக்கான படிக்கட்டு. தமிழ்நாட்டை 1 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக உருவாக்கும் உயர்ந்த குறிக்கோளை எட்டுவதற்கானப் பயணத்தில் இது மற்றொரு மைல் கல்லாகும்” எனத் தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
ஜெ.பிரகாஷ்
மோடியை சந்திக்கும் பன்னீர், எடப்பாடி: அரசு விழா முடிந்து அரசியல் பஞ்சாயத்து?