சென்னை-கன்னியாகுமரி இடையேயான சாலையை எட்டுவழிச் சாலையாக மேம்படுத்தும் திட்டத்தை விரைவாகச் செயல்படுத்த வேண்டும் என்று அனைத்து மாநில நெடுஞ்சாலைத்துறை அமைச்சர்கள் மாநாட்டில் தமிழக அமைச்சர் எ.வ.வேலு வலியுறுத்தியுள்ளார்.
சென்னை, பெங்களூரில் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தலைமையில் அனைத்து மாநில நெடுஞ்சாலைத் துறை மந்திரிகள் மாநாடு நேற்று (செப்டம்பர் 8) நடைபெற்றது.
அதில், தமிழக பொதுப் பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு உரை ஆற்றினார்.
அப்போது பேசிய அவர், “தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை 64,000 கி.மீ. நீளமுள்ள சாலைகளைப் பராமரித்து வருகிறது.
தமிழகத்தில் சாலை வசதிகளை மேம்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
மாவட்டம் மற்றும் தாலுகா தலைமையகங்களை இணைக்கும் முக்கியமான மாநில நெடுஞ்சாலைகளை 2026ஆம் ஆண்டுக்குள் முதலமைச்சர் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ்,
2,200 கி.மீ. தூரத்துக்கு நான்குவழிச் சாலையாகவும் மற்றும் 6,700 கி.மீ. நீளத்துக்கு இரண்டுவழிச் சாலையாகவும் விரிவுபடுத்தப்படும்.
தமிழ்நாட்டில் தற்போதுள்ள 1,280 தரைப்பாலங்கள் 2026ஆம் ஆண்டுக்குள் உயர்மட்ட பாலங்களாக மாற்றப்படும்.
போக்குவரத்து நெரிசலை குறைக்க, நகராட்சிகளுக்கு புறவழிச்சாலை அமைக்கப்படுகிறது. மாநில நெடுஞ்சாலைகள், மாவட்ட முக்கிய சாலைகள் மற்றும் பிற மாவட்டச் சாலைகளில் உள்ள ரயில்வே லெவல் கிராஸிங்குகள், முன்னுரிமை அடிப்படையில் சாலை மேம்பாலமாக மாற்றப்படுகின்றன.
தமிழ்நாட்டின் 10,000 கி.மீ. பஞ்சாயத்துச் சாலைகள், பஞ்சாயத்து யூனியன் சாலைகள் ஐந்து ஆண்டுகளில், பிற மாவட்டச் சாலை தரத்துக்கு மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் சில முக்கியமான திட்டங்களை மத்திய அரசு விரைவாக செயல்படுத்த வேண்டும். அதன்படி, சென்னை – கன்னியாகுமரி சாலையை ஆறு மற்றும் எட்டுவழிச் சாலையாக மேம்படுத்த வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.
-ராஜ்
விரைவில் புதிய பொலிவோடு அண்ணா நூற்றாண்டு நூலகம்: அமைச்சர் எ.வ.வேலு