சென்னையில் 21 சிறு கால்வாய்களைப் புனரமைக்கும் மாநகராட்சி!

Published On:

| By Selvam

Chennai Canal Restore Work

சென்னையில் நந்தனம், அம்பத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள 21 சிறு கால்வாய்களை ரூ.86.4 கோடி செலவில் புனரமைக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

இந்த ஒட்டுமொத்த புனரமைப்புப் பணிகளுக்குமான நிதியை சென்னை ஆறுகள் மீட்பு அறக்கட்டளை ஒதுக்குமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டம் குறித்து பேசியுள்ள சென்னை மாநகராட்சி அதிகாரிகள்,

முதலில் சிறு கால்வாய்களுக்கு வந்து சேரும் கழிவுநீரைத் தடுத்து, கால்வாய்களில் ஓடும் கழிவுகளை அகற்றி, இருபக்கமும் பக்கவாட்டு சுவர்கள் எழுப்பி, குப்பைகள் அதிகம் கொட்டப்படும் இடங்களில் மூடிகளை அமைத்து சென்னை முழுவதும் உள்ள 21 சிறு கால்வாய்கள் புனரமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த சிறு கால்வாய்களை ஆழமாக தூர் வாரி, மழைக்காலங்களில் அதிகப்படியான வெள்ளநீர் இதில் செல்லும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளதாகவும்,

இதற்கான ஒப்பந்தப்புள்ளி நவம்பர் மாதத்தில் கோரப்பட்டு 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் பணிகள் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வியாசர்பாடியில் ஓடும் கால்வாய், அம்பத்தூர் அருகே உள்ள நொளம்பூர் கால்வாய், நந்தனம், நுங்கம்பாக்கம், எம்ஜிஆர் நகர் கால்வாய் போன்றவையும் புனரமைக்கப்படும் கால்வாய்களில் இடம்பெற்றுள்ளன.

 

பருவமழைக் காலங்களில், இந்தக் கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டு மழை மற்றும் கழிவுநீர் குடியிருப்புப் பகுதிகளுக்குள் கலப்பது இதன் மூலம் தடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

கூவம் மற்றும் அடையாறு ஆறுகளில் தண்ணீர் பாய்ந்தோட வேண்டும் என்றால், இந்த சிறு கால்வாய்கள் புனரமைக்கப்பட வேண்டியது அவசியம் என்றும், இந்த கால்வாய்ப் பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, வேலிகள் அமைக்கப்பட வேண்டியது சென்னை மாநகரின் வெள்ளத் தடுப்புக்கு மிகவும் அவசியம் என்றும் சென்னை ஆறுகள் மீட்பு அறக்கட்டளை அமைப்பு சார்பில் கூறப்படுகிறது.

இந்தச் சிறு கால்வாய்களைப் புனரமைப்பது மட்டும் போதாது, குறிப்பிட்ட கால இடைவெளியில் அவற்றை பராமரிப்பதும் அவசியம் என்று கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

பல பகுதிகளில் கழிவுநீர் வெளியேற்றும் வசதி இல்லாததே இந்த சிறு கால்வாய்கள் மோசமான நிலைக்குத் தள்ளப்பட காரணமாக இருப்பதாகவும், சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் கழிவுநீர் கால்வாய்கள் இருப்பதுபோல புறநகர்ப் பகுதிகளிலும் முழுமையாக இந்தப் பணிகள் நடந்துவிட்டால், 21 சிறு கால்வாய்களும் மீண்டும் பழைய நிலைக்குத் தள்ளப்படுவது தவிர்க்கப்படும் என்று கூறப்படுகிறது.

இதுபோன்ற கால்வாய்களில் கழிவுநீரை விடும் மக்களிடம் அபராதம் வசூலிப்பது போன்ற நடவடிக்கைகள் மூலமும் கால்வாய்களை காப்பாற்றலாம் என்றும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளது.

ராஜ்

வாட்ஸ் அப்பில் மின்னம்பலம் செய்திகளை படிக்க… இங்கே க்ளிக் செய்யவும்!

கிச்சன் கீர்த்தனா: பிரெட் பனீர் ரோல்

வாழறதுக்கே வருத்தம் தெரிவிக்கிறாங்க: அப்டேட் குமாரு

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share