செம்பரம்பாக்கம் ஏரிக்குக் கனமழை காரணமாக நீர் வரத்து அதிகரித்துள்ளதால் ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவும் அதிகரித்துள்ளது.
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவடைந்துள்ளதால் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் கன மழை முதல் அதி கனமழை பெய்து வருகிறது.
இதனால் அணைகள், நீர் நிலைகள் அனைத்தும் நிரம்பி வருகின்றன. சென்னைக்குக் குடிநீர் ஆதாரமாக விளங்கக் கூடிய புழல், செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டமும் அதிகரித்து அதன் முழுக் கொள்ளளவை நெருங்கியுள்ளது.
24 அடி நீர் மட்டம் கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் தற்போது 21 அடியாக உள்ளது.
கடந்த நவம்பர் 2 ஆம் தேதி 100 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. அதன் பின்னரும் மழை தொடர்ச்சியாகப் பெய்து ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்ததால் ஏரியில் இருந்து உபரி நீர் 500 கன அடியாகத் திறந்து விடப்பட்டது.
இந்த நிலையில், நேற்று முதல் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் ஏரிக்கு தற்போது, வினாடிக்கு 1,500 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.
இதனால் கூடுதலாக 500 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளதால் தற்போது செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 1000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதன் காரணமாகக் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து மழை பெய்து நீர் வரத்து அதிகரித்தால், ஏரியில் இருந்து திறந்துவிடப்படும் நீரின் அளவும் அதிகரிக்கக்கூடும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
செம்பரம்பாக்கம் ஏரியில் உள்ள நீரின் அளவை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
மோனிஷா
சாதிச்சான்றிதழை சரிபார்க்க 20 ஆண்டுகளா? – உயர்நீதிமன்றம் அதிருப்தி!