பெண்களுக்கு பாதுகாப்பான நகரமாக சென்னையை மாற்ற 3,000 பெண்களின் கருத்துகளைக் கேட்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
சென்னையை பெண்களுக்கு பாதுகாப்பான நகரமாக மாற்ற ஏற்கெனவே நிர்பயா திட்டத்தின் கீழ் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சென்னை மாநகராட்சி, காவல் துறை, போக்குவரத்துத் துறை, சமூகநலத் துறை உள்ளிட்ட துறைகள் இந்தத் திட்டத்தை செயல்படுத்தி வருகின்றன.
இந்தத் திட்டத்தில் பாலினக் கொள்கை மையம் சென்னை மாநகராட்சியில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த மையத்தின் மூலம் சென்னையை பெண்களுக்கு பாதுகாப்பான நகரமாக மாற்றவும், பாலின சமத்துவத்தை ஏற்படுத்தவும் தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளது.
இந்த நிலையில், சென்னையை பாதுகாப்பான நகரமாக மாற்ற 3,000 பெண்களிடம் கருத்து கேட்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
சென்னையில் 2021ஆம் ஆண்டு பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளது.
மத்திய குற்ற ஆவண காப்பக அறிக்கையின்படி சென்னையில் 2018ஆம் ஆண்டு 729 குற்றங்களும், 2020ஆம் ஆண்டு 576 குற்றங்களும், 2021ஆம் ஆண்டு 874 குற்றங்களும் பதிவாகி உள்ளது.
இதன்படி 2020ஆம் ஆண்டை விட 2021ஆம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகமாக பதிவாகி உள்ளது.
இந்த நிலையில், சென்னையை பெண்களுக்கு பாதுகாப்பான நகரமாக மாற்ற ஆய்வு ஒன்றை மேற்கொள்ள சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. தனியார் ஆலோசகர்களை நியமித்து இந்த ஆய்வை மேற்கொள்ள சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இந்த ஆய்வில் சென்னையில் 18 வயதுக்கு மேற்பட்ட 3,000 பெண்களிடம் கருத்து கேட்கப்படவுள்ளது.
பொது இடங்களில் உள்ள பாதுகாப்பு வசதி, பொது இடங்களின் பயன்பாடு, பொது போக்குவரத்தில் பயணம் செய்யும்போது எதிர்கொள்ளும் இடர்பாடுகள், பள்ளி செல்லும் குழந்தைகள் பொது போக்குவரத்தில் பயணம் செய்யும்போது எதிர் கொள்ளும் இடர்பாடுகள், பொது போக்குவரத்தில் பாதுகாப்பு வசதிகளின் நிலை உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது.
-ராஜ்
இயக்குநர் செல்வராகவன் வீட்டுக்குச் சென்ற முதல்வர் : காரணம் என்ன?
நீதிமன்றத்துக்குச் சென்ற திமுகவின் மா.செ. தேர்தல்!