திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர்,மயிலாடுதுறை ஆகிய நான்கு மாவட்டங்களில் இன்று (ஆகஸ்ட் 24 ) மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை மைய இயக்குனர் செந்தாமரை கண்ணன் இன்று பிற்பகல் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர்,மயிலாடுதுறை ஆகிய 4 மாவட்டங்களில் இன்று (ஆகஸ்ட் 24), மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
கோவை, திருப்பூர்,தேனி, திண்டுக்கல்,நீலகிரி, தென்காசி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், புதுக்கோட்டை, அரியலூர், ஈரோடு, திருச்சி, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று (ஆகஸ்ட் 24) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும், தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று(ஆகஸ்ட் 24) முதல் (ஆகஸ்ட் 28) வரை சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், “நாளை (ஆகஸ்ட் 25) கோவை, திருப்பூர்,நீலகிரி, தேனி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், புதுக்கோட்டை, அரியலூர், ஈரோடு, திருச்சி, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, சிவகங்கை, மதுரை மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
குமரிக்கடல்- லட்சத்தீவு பகுதிகள், கேரள – கர்நாடக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் இலங்கையை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்தக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்றும்,
மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம்” என்றும் வானிலை எச்சரிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
மழை அப்டேட் : 12 மாவட்டங்களுக்கு அறிவிப்பு!