மத்திய அரசு ஐடிஐ பயிற்சி பெறுபவர்களுக்கான பாடத்திட்டத்தைக் குறைப்பதனால், அவர்கள் கொத்தடிமை மற்றும் கூலித் தொழிலாளிகளாக மாற்றப்படுகிறார்கள் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி. வேல்முருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தமிழக அரசு அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களை நடத்தி வருகிறது. ஃபிட்டர், டர்னர், மெசினிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு வகையான டெக்னினீசியன்களை இந்தத் தொழிற்பயிற்சி நிலையங்கள் பயிற்றுவித்து அனுப்புகின்றன. இந்நிலையில் ஐடிஐகளின் பாடத் திட்டங்களை மத்திய அரசு மாற்றுவதாக வேல்முருகன் புகார் கூறியுள்ளார்.
அவர் இன்று (05-09-2022) வெளியிட்டுள்ள அறிக்கையில், ”ஐடிஐயில் பயிற்சி பெற்றுச் செல்லும் பயிற்சியாளர்கள் தொழில் முனைவோர்களாக, வெளி நாடுகளுக்கு வேலைவாய்ப்புக்குச் செல்பவர்களாக, பொதுத்துறை, அரசுத்துறை மற்றும் தனியார்த்துறைகளில் சிறந்த தொழிலாளர்களாக பணிபுரியலாம்.
ஆனால், தற்போது அந்த நோக்கத்தைச் சிதைக்கும் வகையிலும், எந்த நிபுணத்துவமும் இல்லாமல் வெறும் சொல்வதைச்செய்யும் கூலித் தொழிலாளியாக மட்டுமே பணிபுரியும் வகையிலும், புதிய தொழிற்கல்வி முறையை அமல்படுத்த மத்திய அரசு முயன்று வருகிறது. இத்தகைய நடவடிக்கை, இளைஞர்களுக்கு, வருங்கால தொழிலாளர்களுக்கு எதிரானதாகும்.
அதாவது, தற்போது ஐடிஐகளில் பயிற்சி பெற்றுச் செல்லும் பயிற்சியாளர்களுக்கு 12ஆம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் வழங்கப்படும் என ஆணை வழங்கப்பட்ட நிலையில், அதற்கான பாடத்திட்டங்களை அதிகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஐடிஐ பயிற்சி பெறும் பயிற்சியாளர்களைக் கொத்தடிமை கூலித் தொழிலாளர்களாக மாற்றும் எண்ணத்தோடு ஒன்றிய அரசு தற்போது பாடத்திட்டங்களைக் குறைத்து ஆணை பிறப்பித்துள்ளது.
பாடத்திட்டங்களுக்கான கால அளவு குறைக்கப்பட்டதோடு, அத்தியாவசிய பாடத்திட்டங்கள் நீக்கப்பட்டுக் குறைவான அளவோடு வர்த்தக கோட்பாடு பாடத்தோடு இணைக்கப்பட்டுள்ளது.
மேலும், இப்புதியமுறை அமல்படுத்தப் பட்டால் ஐடிஐயில் பயிற்சி பெற்று நிறு வனங்களுக்குச் செல்லும் தொழிலாளர்கள் கணிதம், தொழில்நுட்ப வரைபடம், இயந்திர அறிவியல் போன்ற எந்த நிபுணத்துவமும் இல்லாமல் வெறும் சொல்வதைச்செய்யும் கூலித் தொழிலாளியாக மட்டுமே பணிபுரிவார்கள். இது முற்றிலும் துறையை, பயிற்சியின் தரத்தைச் சீர்குலைக்கும் நடவடிக்கையாகும்.
எனவே, புதிய தொழிற்கல்வி முறையைத் தடுத்து நிறுத்துவதோடு, தொழிற்பயிற்சித் துறையின் நோக்கத்தை முழுமையாக அமல்படுத்தி, தமிழ்நாடு தொழிற் துறையில் மேலும் வளர்ந்திடவும் வாய்ப்பு உருவாக்கிடவும், இத்துறையின் பயிற்சி மேம்படவும் தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும்,
“பயிற்சியாளர்களுக்கு இயந்திரங்களில் உரியப் பயிற்சி அளிக்கப்பட்டுவரும் இத்துறையில் திறன் பெற்ற உதவியாளர் முதல் முதல்வர் வரை உள்ள சுமார் 40 விழுக்காடு காலிப்பணியிடங்களைப் பூர்த்தி செய்ய வேண்டும்.
பயிற்சியாளர்களுக்கான உதவித்தொகையை அதிகப்படுத்திடவும், தொழில் நிறுவனங்கள் தொழில்பழகுனர் பயிற்சியில் பணிபுரியும் பயிற்சியாளர்களைப் பணி நிரந்தரம் செய்திடவும் தமிழ்நாடு அரசு முன் வர வேண்டும்” என்றும் தி. வேல்முருகன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
மோனிஷா