”எங்களை இழிவாக ஏதோ சாக்கடையை பார்க்கிற மாறி பார்க்கிறார்கள். எங்களை ஒரு மனுசனாவே மதிப்பதில்லை” என்று புல்லட் பைக் ஓட்டியதற்காக கைகள் வெட்டப்பட்ட பட்டியலின மாணவரின் சகோதரர் வேதனையுடன் தெரிவித்துள்ளார். caste-cruelty-for-sc-bullet-riding
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே மேளப்பிடாவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யாசாமி.
பட்டியலினத்தைச் சேர்ந்தவரான இவர் அரசு கல்லூரியில் மூன்றாமாண்டு படித்து வருகிறார். நேற்று (பிப்ரவரி 12) கல்லூரி முடிந்து புல்லட் பைக்கில் தனது ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார்.
அப்போது அதே ஊரில் வசிக்கும் 3 இளைஞர்கள் அவரை வழிமறித்து, ”பட்டியலின சாதியில் பிறந்த நீ, எப்படி இந்த புல்லட் வண்டியை ஓட்டலாம்? கை இருந்தால் தானே புல்லட் ஓட்டுவாய்” என்று கூறி அய்யாசாமியின் கையை வாளால் வெட்டியுள்ளனர். மேலும் அவரது வீட்டையும் சூறையாடினர்.

தற்போது மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அய்யாசாமியின் வெட்டப்பட்ட கையை சேர்க்கும் அறுவை சிகிச்சை நடைபெற்று வருகிறது. அவரது குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் கொலைவெறி தாக்குதலில் வல்லரசு, ஆதிஸ்வரன் மற்றும் வினோத் ஆகிய 3 பேரையும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கீழ் கைது செய்த சிப்காட் போலீசார் சிறையில் அடைத்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவரின் சகோதரர் முனியசாமி செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டி பலரின் மனதையும் உலுக்கியுள்ளது.

மனுசனாவே மதிப்பதில்லை! caste-cruelty-for-sc-bullet-riding
அதில், “எங்களை இழிவாக ஏதோ சாக்கடைய பார்க்கிற மாறி பார்க்கிறார்கள். எங்களை ஒரு மனுசனாவே மதிப்பதில்லை.
கடந்தாண்டு இரண்டு மாடி வீட்டை கட்டியதில் இருந்தே எங்களுக்கு பிரச்சனை கொடுக்க ஆரம்பித்தனர். ஜன்னலை உடைப்பது, பாதையை மறைப்பது. ஈபி லைனை கட் செய்வது, தண்ணீர் தொட்டியை உடைப்பது என தொல்லைக் கொடுத்து வந்தனர்.
புதிதாக புல்லட் வாங்கிய பிறகு எல்லோரும் போகிற பாதையில் போக கூடாது. பெரிய வண்டி ஓட்டக்கூடாது. வேகமாக ஓட்டக்கூடாது என்று தொடர்ந்து பிரச்சனை செய்து வருகின்றனர். ஒவ்வொரு தடவையும் இதுதொடர்பாக போலீசாரிடம் தெரிவித்தோம்.
இந்த நிலையில் புதுவண்டியில் என் தம்பி சென்றதை பொறுக்க முடியாமல், சாதி பேரைச் சொல்லி கெட்டவார்த்தைகளால் திட்டி, ‘நீங்க எல்லாம் புல்லட் ஓட்டலாமா?’ என்று கையை வெட்டியுள்ளார்கள்.

நாங்கள் முன்னேறுவது அவர்களுக்கு பிடிக்கல! caste-cruelty-for-sc-bullet-riding
ரத்தம் சொட்ட சொட்ட உயிருக்கு பயந்து வீட்டுக்கு ஓடி வந்த தம்பியை, அழைத்துக்கொண்டு ஆஸ்பத்திரிக்கு வந்தோம். அப்போது கூட , “வெட்டுனதுக்கு அப்புறமும் இந்த பாதையில எப்படி கூட்டு போவாய்” என்று கத்திக்கொண்டு, ஆயுதத்துடன் எங்களை துரத்தினார்கள்.
தொடர்ந்து யாருமில்லாத வீட்டில் அத்துமீறி, சேர், கண்ணாடி, ஜன்னல், ஸ்விட்ச் பாக்ஸ், டியூப் லைட் என அனைத்தையும் அடித்து உடைத்து தரைமட்டாக்கி விட்டு, ’உங்களால என்னடா பண்ண முடியும்? முடிஞ்சா வாழ்ந்து பாருங்கடா”னு சொல்லி கொலை மிரட்டல் விட்டுருக்காங்க… என்ன செய்வதென்றே தெரியவில்லை.
நாங்கள் முன்னேறுவது அவர்களுக்கு பிடிக்கவில்லை. நான் பி.எஸ்சி பட்டதாரி. என் தம்பி இப்போது பி.எஸ்சி படித்து வருகிறான். நாளை அவனுக்கு செமஸ்டர் தேர்வு தொடங்க உள்ள நிலையில், கையை வெட்டியுள்ளனர். தற்போது அவனுடைய வாழ்க்கையே கேள்விக்குறியாகி உள்ளது ” என்கிறார் வேதனையுடன்.