சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள மாயாஜால் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட 2ஏக்கர் நிலத்திற்கான பட்டாவை சென்னை உயர்நீதிமன்றம் இன்று (செப்டம்பர் 1) ரத்து செய்துள்ளது.
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள மாயாஜால் சென்னையில் உள்ள மிகமுக்கியமான பொழுதுபோக்கு மையங்களில் ஒன்றாகும்.
30 ஏக்கர் பரப்பளவு கொண்ட மாயாஜாலில் திரையரங்குகள், பலவிதமான கடைகள், ஓய்வகம் என பல அம்சங்களும் நிறைந்து காணப்படுகிறது.

மாயாஜால் மிக முக்கியமான பொழுதுபோக்கு தளமாக இருப்பதால் இங்கு எப்போதும் மக்கள் திரளாகவே காணப்படும்.
எனவே வாகன நிறுத்துமிடமாக நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள 2 ஏக்கர் அளவிலான இடம் பயன்படுத்தப்பட்டு வருகிறது .
தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான இந்த இடத்தை நீண்ட கால குத்தகைக்கு மாயாஜால் நிர்வாகம் விண்ணப்பித்து அது நிலுவையில் இருந்தது.
பின்னர், இந்த தகவலை மறைத்த மாயாஜால் 2 ஏக்கர் இடத்திற்கு பட்டா கேட்டு காஞ்சிபுரம் தாசில்தாரருக்கு விண்ணப்பத்தை வழங்கி இருந்தது.
இந்த விண்ணப்பத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படாததால் மாயாஜால் பொழுதுபோக்கு நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, இரண்டு ஏக்கர் நிலத்துக்கு பட்டா வழங்க வேண்டுமென கடந்த 2015 ஆம் ஆண்டு உத்தரவிட்டார்.
தனி நீதிபதி வழங்கிய இந்த உத்தரவை எதிர்த்து காஞ்சிபுரம் தாசில்தார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கானது, இன்று நீதிபதிகள் டி.ராஜா மற்றும் குமரேஷ் பாபு முன்பு விசாரணைக்கு வந்தது.
இதில், 2 ஏக்கர் நிலம் தொடர்பாக பல உண்மை தகவல்களை மாயாஜால் நிறுவனம் தனி நீதிபதி முன்பு மறைத்து பட்டா பெற்றுள்ளதால் அதனை ரத்து செய்ய வேண்டும் என கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர் அருண் வாதிட்டார்.
இந்த வாதத்தை ஏற்ற நீதிபதிகள், மாயாஜால் பொழுதுபோக்கு நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட இரண்டு ஏக்கர் நிலத்திற்கான பட்டாவை ரத்து செய்து உத்தரவிட்டனர்.
ஒரு ரூபாய்க்கு சாப்பாடு : ஏழை மக்களின் பசியாற்றும் மனிதநேய தம்பதி!