கண்முன்னே அடக்கம் செய்யப்பட்ட ஒருவர் மறுநாள் மீண்டும் உயிருடன் வந்து முன் நின்றால் எவ்வளவு அதிர்ச்சியாகவும், ஆச்சரியமாகவும் இருக்கும். அத்தகைய சம்பவம் தான் சென்னை அருகே ஒரு குடும்பத்தில் நடந்தேறியுள்ளது.
சென்னை தாம்பரத்தை அடுத்த கூடுவாஞ்சேரி அருகே அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் சந்திரா என்ற 72 வயது மூதாட்டி.
இவருடைய கணவர் சுப்பிரமணி கடந்த சில வருடங்களுக்கு முன்பு உயிரிழந்து விட்டார். இதனால் அவர் தனது மகன் வடிவேலுவின் பராமரிப்பில் வசித்து வருகிறார். வயதான நிலையில் கோவிலுக்கு அடிக்கடி செல்வதை வழக்கமாக கொண்டவர் சந்திரா.
அதன்படி நேற்று (செப்டம்பர் 21) காலை சிங்கப்பெருமாள் அருகே உள்ள கோவிலுக்கு சென்று வருவதாக வீட்டில் இருந்தவர்களிடம் தெரிவித்துவிட்டு அவர் சென்றுள்ளார்.
சிறிது நேரத்தில் சுமார் காலை 8.30 மணி அளவில் கூடுவாஞ்சேரி அருகே வயதான மூதாட்டி ஒருவர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்துள்ளார். அதனை சந்திராதான் என்று நினைத்த அவரது உறவினர்கள் வடிவேலுக்கு தகவல் கொடுத்தனர்.
அதற்குள் உயிரிழந்த மூதாட்டியின் உடல் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அங்கு சென்று பார்வையிட்ட வடிவேலு, அவர் தனது தாய் சந்திரா தான் என்று உறுதிபடுத்தியுள்ளார்.
இதனையடுத்து வழக்குப்பதிவு விசாரித்து வந்த தாம்பரம் ரயில்வே போலீசாரும், மூதாட்டியின் உடலை அவரிடம் ஒப்படைத்தனர்.
சந்திரா உயிரிழந்தது அவரது உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. தெருவெங்கும் சந்திராவின் புகைப்படத்துடன் கூடிய கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டப்பட்டது.
தாரை தப்பட்டையுடன் இறுதி மரியாதை செலுத்தி மூதாட்டியின் உடலை நேற்று மாலையே நல்லடக்கம் செய்தனர்.
அதனை தொடர்ந்து இன்று காலை வழக்கப்படி சந்திராவிற்கு படையல் போட்டனர். அப்போது உயிரிழந்ததாக கருதப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்ட சந்திரா, அவர்கள் முன்பு உயிருடன் மீண்டும் வீட்டிற்கு வந்துள்ளார்.
தனது தாய் சந்திராவை மீண்டும் உயிருடன் கண்ட வடிவேலு உட்பட உறவினர்கள் அனைவரும் அதிர்ச்சியும், ஆச்சரியமும் ஒரே நேரத்தில் அடைந்தனர்.
அப்போது தான் நேற்று அடக்கம் செய்தது சந்திராவின் உடல் இல்லை என்பது அவர்களுக்கு புரிந்தது.
இதுகுறித்து போலீசாருக்கு உடனடியாக தகவல் தெரிவித்த நிலையில் சந்திரா மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
மேலும் அடக்கம் செய்யப்பட்ட உடல் யாருடையது என்பது குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கிறிஸ்டோபர் ஜெமா
எம்.ஜி.ஆர் முதல் ஸ்டாலின் வரை : டிஜிபி அலுவலகத்தில் மரம் சொல்லும் கதை!
பிஎஃப்ஐ அமைப்பை புரட்டியடிக்கும் என்.ஐ.ஏ: பின்னணி இது தான்!