சுகியன் என்றாலே அது இனிப்பு வகையைச் சேர்ந்த உணவு என்பதுதான் பலரது எண்ணம். அது உண்மையும்கூட. இனிப்பை நினைவூட்டும் சுகியத்தைச் சற்று மருத்துவக் குணம் கொண்டதாகவும் மாற்றி செய்யலாம். அதற்கு இந்த பாகற்காய் சுகியன் ரெசிப்பி உதவும். பாகற்காயை விரும்பாதவர்கள்கூட இந்த சுகியனுக்கு அடிமையாகி விடுவார்கள்.
என்ன தேவை?
பாகற்காய் – 1 (பொடியாக நறுக்கவும்)
மைதா மாவு – அரை கப்
இட்லி மாவு – அரை கப்
கடலைப்பருப்பு – 2 டேபிள்ஸ்பூன்
பாசிப்பருப்பு – 2 டேபிள்ஸ்பூன்
கொள்ளு – 2 டேபிள்ஸ்பூன்
துவரம்பருப்பு – 2 டேபிள்ஸ்பூன்
கொண்டைக்கடலை (கறுப்பு) – 2 டேபிள்ஸ்பூன்
சீரகம் – அரை டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 2 (பொடியாக நறுக்கவும்)
பெருங்காயத்தூள் – சிறிதளவு
துருவிய தேங்காய் – 3 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எப்படிச் செய்வது?
ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, இட்லி மாவு, உப்பு சேர்த்து ஒன்றாகக் கலந்துகொள்ளவும். மற்றொரு பாத்திரத்தில் கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு, கொள்ளு, துவரம்பருப்பு மற்றும் கொண்டைக்கடலையை ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து இரண்டு மணி நேரம் ஊறவைத்து, பிறகு குக்கரில் வேகவைத்துக் கொள்ளவும். பருப்புக்கலவை ஆறியதும் தண்ணீரை வடித்து மிக்ஸியில் சேர்த்து மையாக அரைத்துக்கொள்ளவும்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் சேர்த்து சூடானதும் சீரகம் சேர்த்து தாளித்து, அத்துடன் பச்சை மிளகாய், பாகற்காய், பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாக வதக்கவும். இதனுடன் தேங்காய்த் துருவல், அரைத்த பருப்புக்கலவையை சேர்த்துக் கிளறி இறக்கவும். ஆறியதும் சிறிய உருண்டைகளாக பிடித்து வைக்கவும். பிறகு, பிடித்து வைத்த ஒவ்வொரு உருண்டையையும் கலந்து வைத்த மாவில் நன்கு புரட்டி எடுத்து சூடான எண்ணெயில் பொரித்து எடுத்துப் பரிமாறவும்.
எக்லெஸ் டூட்டி ஃப்ரூட்டி குக்கீஸ்