கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல்… சப்பணமிட்டுச் சாப்பிடுவோமா?

Published On:

| By Selvam

‘தரையில உட்கார்ந்து  சப்பளங்கால் போட்டு சாப்பிடுப்பா’ – உணவு வேளைகளில் பெரியவர்கள் தவறாமல் சொல்லும் அறிவுரையும் அதன் அருமையும் அர்த்தமும் புரியாமல்போய் இன்று வெளியிடங்கள் என்றால் டைனிங்டேபிள், வீடு என்றால் சோஃபா என்றுதான் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம். கீழே தரையில் அமர்ந்து சாப்பிடுவது அரிதாகிவிட்டது.

“இத்தனைக்கும் உணவுகளைத் தேர்ந்தெடுத்துத்தான் சாப்பிடுகிறோம். ஆனாலும், உடல் உபாதைகள் வருகின்றன.

காரணம், தரையில் அமராமல் கண்டபடி அமர்ந்து சாப்பிடும் முறையினால்தான்” என்கிறார்கள் உணவியலாளர்கள். மேலும் சப்பணமிட்டுச் சாப்பிடுவதால் உண்டாகும் பலன்கள் குறித்தும் விளக்கமளித்தனர்.

“தரையில் அமர்ந்து சாப்பிடும்போது, இயல்பாகவே முன்பக்கமாக வளைந்தும், உணவை விழுங்கும்போது நிமிர்ந்தும்  சாப்பிடுவோம். இப்படி முன்னும் பின்னும் அசைவதால், அடிவயிற்றில் உள்ள தசைகளின் இயக்கம் சிறப்பாக இயங்கும்.

தரையில் உட்கார்ந்து சாப்பிடும்போது, கவனம் எங்கும் சிதறாமல், உணவின் மீதும் நாம் சாப்பிடும் அளவின் மீதும் மட்டுமே இருக்கும்.

‘வயிறு நிறைந்தது’ என்ற உணர்வை மூளைக்கும் வயிற்றுக்கும் சிக்னல் கொடுக்கப் போதுமான அவகாசம் கிடைக்கும். அளவு தெரியாமல், அதிகமாகச் சாப்பிட மாட்டோம். இது, உடல் எடையைக் குறைப்பதற்கு உதவும்.

தரையில் அமர்வது சற்று சிரமமாக இருக்கலாம். கால்கள் மரத்துப் போனதுபோலக்கூடத் தோன்றும். கால் நரம்புகளின் வலிமையின்மையே இதற்கு முதல் காரணம்.  நரம்புகள் நன்கு வலிமையாக இருந்தால், ரத்த ஓட்டத்தில் தடை ஏற்படுவதில்லை.

எவ்வளவு மடங்கினாலும் மெதுவாக ரத்தம் உடம்பின் கீழ்ப் பகுதிக்குச் செல்லும். நரம்புகள் வலிமை பெற பெரியவர்கள் பரிந்துரைத்தது பத்மாசனம் என்னும் யோகா.

இதை அன்றாட வாழ்வில் நாம் கடைப்பிடிக்க வேண்டும் என்பதற்காகவே, `தரையில் அமர்ந்து சாப்பிட வேண்டும்’ என்றார்கள். இது நோயின்றி நீண்ட நாள் வாழ உதவும்.

தரையில் கால்களை மடக்கி, தோள்களை நிமிர்த்தி உட்காரும்போது, நம் முதுகுத்தண்டு வலுப்பெறுகிறது. இது, இடுப்புவலியால் அவதிப்படுபவர்களுக்குச் சிறந்த தீர்வு தரும்.

அதுமட்டுமல்ல , சாப்பிடும் போது நம் அசைவுகளே மூட்டுப் பகுதிகளுக்குச் சிறந்த பயிற்சியாக அமையும்” என்கிறார்கள்.

இன்று சண்டே ஸ்பெஷலாக தரையில் அமர்ந்து சப்பணமிட்டுச் சாப்பிடுவோமா?

தினை கிச்சடி

பீட்ரூட் இடியாப்பம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel