கடலூர் மத்திய சிறை உதவி ஜெயிலரை குடும்பத்துடன் தீ வைத்து எரிக்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேப்பர்மலை பகுதியில் உள்ள, கடலூர் மத்திய சிறையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர்.. இந்த சிறையில் உதவி ஜெயிலராக மணிகண்டன் பணிபுரிந்து வருகிறார். இவர் சிறைக்கு அருகில் உள்ள ஜெயிலர் குடியிருப்பில் வசித்து வருகிறார். இன்று அதிகாலை அவரது வீட்டில் பெட்ரோல் வாசனை வந்திருக்கிறது.
இதனால், வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த அவருடைய மனைவி முழித்து பார்த்த போது பெட்ரோல் ஊற்றி கிடந்தது தெரியவந்தது. இதனால் பதறிபோன அவர் குழந்தைகள் மற்றும் பெற்றோரை எழுப்பி வீட்டை விட்டு வெளியேறினார். அப்போது வீட்டின் ஒரு அறையிலிருந்து அதிக அளவு புகை வந்ததுடன், அந்த அறையில் தீப்பிடித்திருக்கிறது. அருகிலிருந்த சமையலறைக்கு தீ பரவுவதற்கு முன்பாக சமையலறையிலிருந்த சிலிண்டரை வீட்டிற்கு வெளியே எடுத்து வைத்துவிட்டு, தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் அக்கம்பக்கத்தினரும் சேர்ந்து வீட்டிலுள்ள தீயை அணைக்க முயன்றனர். இந்தச் சம்பவம் நடந்தபோது உதவி ஜெயிலர் மணிகண்டன் வீட்டில் இல்லை. அவர் வெளியூர் சென்றுள்ளார்.
சம்பவம் நடந்த மணிகண்டன் வீட்டின் அருகிலேயே இரண்டு பெட்ரோல் பாட்டில் கிடந்துள்ளது. இதனால் தீ விபத்து இல்லை யாரோ சதிச்செயலில் ஈடுபட்டுள்ளனர் என்பது தெரியவந்தது.
மணிகண்டன் மனைவி இச்சம்பவம் குறித்து கடலூர் முதுநகர் போலீசாரிடம் புகார் கொடுத்தார். இதுகுறித்து விசாரணை நடத்தும் போலீசார், கடலூர் மத்திய சிறைச்சாலையில் இருக்கும் எண்ணூர் தனசேகரன் கூலிப்படை மூலம் இந்த சதிச் செயலில் ஈடுபட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கின்றனர்.
தனசேகரன் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. ஆகஸ்ட் 8ஆம் தேதி சிறையில் போலீசார் நடத்திய சோதனையில் தனசேகரனிடம் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. அப்போது ஜெயிலர் மணிகண்டனுக்கும் சிறை கைதி தனசேகரனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தனசேகரன் மீது கடலூர் முதுநகர் போலீசில் மணிகண்டன் புகார் அளித்தார். போலீசார் தனசேகரன் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதனால் பழிவாங்கும் நோக்கில் கூலிப்படை மூலம் தனசேகரன் ஜெயிலர் மணிகண்டன் வீட்டிற்கு தீ வைத்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.
செல்வம்
2021ல் அதிக விபத்து : இரண்டாம் இடத்தில் தமிழகம்!