2,438 கோடி மோசடி செய்த வழக்கில் ’ஆருத்ரா கோல்டு’ நிறுவன இயக்குநரும் பாஜக நிர்வாகியுமான ஹரிஷ் மற்றும் மாலதி ஆகிய இருவரையும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் இன்று (மார்ச் 24 ) கைது செய்தனர்.
சென்னை அமைந்தகரையில் ’ஆருத்ரா கோல்டு’ நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது.
இந்த நிறுவனம் தமிழகம் முழுவதும் பல கிளைகள் அமைத்து 10 முதல் 30 சதவீதம் வட்டி தருவதாக கவர்ச்சிகரமான அறிவிப்பை அறிவித்தது.
இதனை நம்பி லட்சக்கணக்கானோர் ’ஆருத்ரா கோல்டு’ நிறுவனத்தில் முதலீடு செய்தனர். இதன் மூலம் பொதுமக்களிடம் முதலீடாக பெற்ற ரூ.2,438 கோடி மோசடி செய்யப்பட்டது.
இந்த வழக்கில் ஏற்கனவே அந்த நிறுவனத்தின் அதிகாரிகள் பலர் கைது செய்யப்பட்டனர். ‘ஆருத்ரா கோல்டு’ நிறுவனத்தின் வங்கி கணக்குகள், சொத்துக்கள் முடக்கப்பட்டன.
இதுதொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த நிறுவனத்தின் மேலாண் இயக்குனர்கள் ராஜசேகர் மற்றும் உஷா ராஜசேகர், மைக்கேல் ராஜ் ஆகிய 3 பேரும் வெளிநாட்டில் தலைமறைவாகி விட்டனர்.
மேலும் ‘ஆருத்ரா கோல்டு’ நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவரான பாஜக நிர்வாகி ஹரிஷ் மற்றும் அந்த நிறுவனத்தின் மற்றொரு இயக்குனரான மாலதி ஆகியோர் குறித்து குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வந்தனர்.

இந்நிலையில், பாஜக நிர்வாகி ஹரிஷ், மாலதி ஆகிய 2 பேரையும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் இன்று (மார்ச் 24 ) கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
ஹரிஷ் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழ்நாடு பாஜகவின் விளையாட்டு பிரிவு மாநில செயலாளராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
மு.வா.ஜெகதீஸ் குமார்