குழந்தைகளின் ஆரோக்கியமான உணவுகளில் பிரதான இடம்பிடிப்பது அரிசி – பருப்பு சாதம்தான். சீரான ஆழ்ந்த தூக்கத்துக்கு வழிவகுக்கும் இந்த பருப்பு சாதம், உடல் பருமனைத் தவிர்க்க உதவும். அனைவருக்கும் ஏற்றதாகவும் அமையும்.
என்ன தேவை?
பொன்னி அரிசி – 200 கிராம்
துவரம் பருப்பு – 50 கிராம்
சீரகம் – 2 டீஸ்பூன்
பூண்டு – 5 பல்
கறிவேப்பிலை – சிறிதளவு (ஒன்றிரண்டாக அரைத்து எடுக்கவும்)
வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி – தலா 2 (பொடியாக நறுக்கவும்)
பீன்ஸ் – 25 கிராம், கேரட் – 25 கிராம்
தாளிக்க…
கடுகு, உளுத்தம் பருப்பு – தலா ஒரு டீஸ்பூன்
கறிவேப்பிலை, பட்டை – சிறிதளவு
லவங்கம் – ஒன்று
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்
நல்லெண்ணெய் – 5 டீஸ்பூன்
சாம்பார் பொடி, நெய், உப்பு – தேவையான அளவு
எப்படிச் செய்வது?
அரிசியுடன் பருப்பு சேர்த்து அரை மணி நேரம் ஊறவைத்துக் களையவும். குக்கரில் எண்ணெய் ஊற்றிச் சூடாக்கித் தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைச் சேர்த்துத் தாளிக்கவும்.
இதனுடன் சீரகம், பூண்டு, கறிவேப்பிலை, மஞ்சள்தூள், சாம்பார்ப் பொடி, உப்பு, வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் எல்லாம் சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு, ஒரு பங்கு அரிசி பருப்புக் கலவைக்கு 3 பங்கு தண்ணீர் ஊற்றிக் கொதித்ததும், அரிசி-பருப்புக் கலவையைப் போட்டு மூடி மூன்று விசில் விட்டு இறக்கவும். மேலே நெய் ஊற்றிப் பரிமாறவும்.