கள்ளக்குறிச்சி பள்ளி நிர்வாகிகள் ஜாமீனை எதிர்த்து மேல்முறையீடு: அமைச்சர் ரகுபதி

தமிழகம்

“கள்ளக்குறிச்சி பள்ளி நிர்வாகிகளின் ஜாமீனை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும்” என தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி மரண வழக்கில் அப்பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, முதல்வர் சிவசங்கரன் மற்றும் வேதியியல் ஆசிரியர் ஹரிப்ரியா, கணித ஆசிரியர் கிருத்திகா ஆகிய 5 பேருக்கும் சென்னை உயர் நீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் 26ஆம் தேதி நிபந்தனை ஜாமீன் வழங்கியது.

அதன்பிறகு, ஆகஸ்ட் 29ம் தேதி அவர்களுக்கான நிபந்தனைகள் என்னவென்பதை நீதிபதி இளந்திரையன் தெரிவித்திருந்தார்.

அதில் பள்ளியின் நிர்வாகிகள் மதுரையில் தங்கியிருந்து, 4 வாரங்களுக்கு தல்லாபுரம் காவல் நிலையத்திலும், பள்ளியாசிரியைகள் சேலத்தில் தங்கியிருந்து 4 வாரங்களுக்கு செவ்வாய்பேட்டை காவல் நிலையத்திலும் தினம் காலையும் மாலையும் கையெழுத்திட வேண்டும்.

பின்னர் 4 வாரங்களுக்கு தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் சிபிசிஐடி போலீசார் முன் ஆஜராகி கையெழுத்திட வேண்டும். விசாரணைக்கு தேவைப்படும் போது ஆஜராக வேண்டும் என நிபந்தனை விதித்திருந்தார்.

இதைத்தொடர்ந்து, ஆகஸ்ட் 31ம் தேதி, சேலம் மத்திய சிறையில் இருந்து கள்ளக்குறிச்சி பள்ளி நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

இந்த நிலையில், மாணவி மரண வழக்கில் ஸ்ரீமதியின் பெற்றோர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பள்ளி நிர்வாகிகள் 5 பேருக்கு ஜாமீன் வழங்கிய சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து,

உச்சநீதிமன்றம் செல்ல உள்ளதாகவும், ஸ்ரீமதி மரணம் குறித்து சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்த கருத்துக்களை எதிர்த்து முறையீடு செய்யப்போவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில், இன்று (செப்டம்பர் 2) புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழகச் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி,

“கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கில், பள்ளி நிர்வாகிகள் மற்றும் ஆசிரியைகளுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது குறித்து அரசு சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை செய்தபின் மேல்முறையீடு செய்யப்படும்” என்றார்.

ஜெ.பிரகாஷ்

ஸ்ரீமதி மரணம்: மின்னம்பலமும் உயர் நீதிமன்றமும்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *