36,000 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் கோவையில் மற்றொரு புதிய ஐடி பார்க் அமைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் இன்று (நவம்பர் 6) அறிவித்தார்.
தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் கள ஆய்விற்காக இரண்டு நாள் பயணமாக கோவை சென்றுள்ளார்.
இன்று அனுப்பர்பாளையத்தில் தந்தை பெரியார் நூலகம் மற்றும் அறிவியல் மையக் கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டினார்.
அப்போது கோவை மாவட்டத்துக்கு புதிய அறிவிப்புகளையும் வெளியிட்டார்.
உலக அளவில் தங்க நகைகள் தயாரிப்பில் முக்கிய மையமாக விளங்கும் கோவைக்கு, குறிச்சியில் உள்ள தொழிற்பேட்டையில் 126 கோடி ரூபாய் செலவில், தொழில் வளாகம் கட்டப்படும்.
NABL அங்கீகாரம் பெற்ற ஆய்வகம் உள்ளிட்ட எல்லா வசதிகளையும் கொண்ட இந்த வளாகத்தில் 2,000 பேருக்கு நேரடியாகவும், 1500 பேருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும்.
தற்போதுள்ள டைடல் பார்க் அருகிலேயே எல்கோசிஸ் பகுதியில் உள்ள 17.17 ஏக்கர் பரப்பளவில், மேலும் ஒரு பெரும் தகவல் தொழில்நுட்ப வளாகம் அமைக்கப்படும்.
சென்னையில் சர்வதேச தரத்தில் அமைக்கப்பட்ட இராமானுஜம் தகவல் தொழில்நுட்ப நகரத்தைப் போன்றே கோவையில், தனியார் தொழில்நுட்ப நிறுவனங்களுடன் இணைந்து இத்திட்டம் செயல்படுத்தப்படும்.
சுமார் 36,000 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கக் கூடிய வகையில் மூன்று மில்லியன் சதுரஅடி பரப்பளவில் அமைக்கப்பட உள்ள இந்த தகவல் தொழில்நுட்ப வளாகம், கோயம்புத்தூர் மாநகரத்தின் எதிர்கால வளர்ச்சியில் ஒரு புதிய மைல்கல்லாக நிச்சயம் அமையும்.
சின்னியம்பாளையம் முதல் நீலாம்பூர் வரை மேலும் 5 கிலோ மீட்டர் நீளத்திற்கு சுமார் 600 கோடி ரூபாய் செலவில் உயர்மட்ட மேம்பாலச் சாலை நீட்டிக்கப்படும்.
தொண்டாமுத்தூர் பகுதியில் யானைகள் நடமாட்டத்தால் நிகழும் மனித விலங்கு மோதல் சம்பவங்களைத் தடுக்கவும். பயிர்சேதங்களையும். உயிரிழப்புகளையும் தவிர்க்கவும் சுமார் 7 கோடி ரூபாய் செலவில் 10 கிலோ மீட்டர் நீளத்திற்கு யானை புகாத நவீன பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்படும்.
கோட்டூர். வேட்டைக்காரன்புதூர் உடையகுளம் ஆகிய பேரூராட்சிகள் மற்றும் ஆனைமலை ஊராட்சி ஒன்றியத்தில் இருக்கும் 38 கிராமங்களுக்கு பயனளிக்கக்கூடிய கூட்டுக் குடிநீர் திட்டம் 26 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும்.
பொள்ளாச்சி தெற்கு மற்றும் கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியங்களில் இருக்கும் 295 கிராமங்களுக்கு குடிநீர் வழங்கக்கூடிய கூட்டுக் குடிநீர் திட்டம் 51 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும்.
கோயம்புத்தூர் மாநகராட்சியில், பல ஆண்டுகளாக புதுப்பிக்கப்படாமல் உள்ள சாலைகள், பாதாளச் சாக்கடைப் பணிகளால் பாதிக்கப்பட்டுள்ள சாலைகள், அதிக குடியிருப்புகள் இருக்கக்கூடிய பகுதிகளில் உள்ள மண்சாலைகள், இவற்றையெல்லாம் தரமான தார்சாலைகளாக மேம்படுத்திட 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சிறப்பு திட்டம் ஒன்று செயல்படுத்தப்படும் உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
பிரியா