அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கில் எஃப்ஐஆர் லீக்கான விவகாரத்தில் விசாரணை என்ற பெயரில் பத்திரிகையாளர்களை துன்புறுத்தக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. anna university fir leak case
கடந்த டிசம்பர் 23ஆம் தேதி சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். இந்த வழக்கில் கோட்டூர்புரத்தைச் சேர்ந்த ஞானசேகரன் கைது செய்யப்பட்டார்.
இதற்கிடையே பாலியல் வன்கொடுமை வழக்கின் எஃப்ஐஆர் லீக் ஆனது.
இது குறித்து சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். எப்.ஐ.ஆர் தயார் செய்த காவல் நிலைய எழுத்தர் உட்பட 14 பேர் விசாரணை வளையத்துக்குள் உள்ளனர்.
இந்த நிலையில் எப்ஐஆர் வெளியான விவகாரத்தில் விசாரணை என்ற பெயரில் பத்திரிகையாளர்கள் துன்புறுத்தப்படுவதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தின் சார்பில் வழக்கறிஞர் சூரியபிரகாசம், தாக்கல் செய்த மனுவில், பத்திரிகையாளர்களின் செல்போன்களை பிடுங்கிக் கொண்டு போலீசார் துன்புறுத்துகின்றனர் என்று குறிப்பிட்டிருந்தார்.
மூன்று முறை சம்மன் anna university fir leak case
இந்த மனு இன்று (பிப்ரவரி 4) விசாரணைக்கு வந்த போது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் ஜோதி மணியன், அருண் மற்றும் விவேகானந்தன், “எப்ஐஆர் லீக் ஆனது தொடர்பாக சிறப்பு விசாரணை குழு மூன்று முறை சம்மன் அனுப்பியது. அதன்படி விசாரணைக்கு ஆஜராகி ஒத்துழைப்பு வழங்கப்பட்டது. அப்போது மொபைல் போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர். அவற்றை திரும்ப ஒப்படைக்க உத்தரவிட வேண்டும்” என்று வாதாடினர்.

மேலும் அவர்கள், “அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரம் தொடர்பாக வெளியிடப்பட்ட செய்தியில் எந்த இடத்திலும் பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளத்தை வெளிப்படுத்தவில்லை. இந்த வழக்கில் பத்திரிகையாளர்கள் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அல்ல. எப்ஐஆர்-ஐ இணையதளத்தில் பதிவேற்றம் செய்த காவல்துறையினருக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எப்ஐஆர்-ஐ பதிவேற்றும் செய்யும் சிசிடிஎன்எஸ் இணையதளத்தை என்.ஐ.சி-தான், பராமரிக்கிறது. . எப்.ஐ.ஆர் லீக் ஆனதற்கு தொழில்நுட்ப கோளாறு தான் காரணம் என என்.ஐ.சி. இயக்குனர் கூறியிருக்கிறார்.
எனவே சட்டத்தை விடவும், நீதிமன்றத்தை விடவும் பெரிதானவர்கள் என்றும் அதிக அதிகாரம் உள்ளதாகவும் சிறப்பு புலனாய்வுக் குழு கருதக்கூடாது.
அடுக்கடுக்கான கேள்வி anna university fir leak case
இதுவரை 56 கேள்விகளை வழக்கிற்கு சம்பந்தமில்லாமல் கேட்டுள்ளனர். இது பத்திரிகையாளர்களின் உரிமையை மீறும் வகையில் இருக்கிறது. ஊடகத்தினருக்கு தடை விதித்தால், ஜனநாயகம் இருக்காது” என்று வாதிட்டனர்.
காவல்துறை தரப்பில் வழக்கறிஞர் முகிலன் ஆஜராகி, “பத்திரிகை சுதந்திரத்தை தடை செய்யவில்லை. சம்மன் மட்டுமே அனுப்பப்பட்டு, விவரங்கள் கேட்கப்பட்டுள்ளன. அவர்களை துன்புறுத்தும் எண்ணம் போலீஸுக்கு கிடையாது. அனைத்து நடைமுறையும் பின்பற்றப்படுகிறது. எந்த அச்சமும் கொள்ளத் தேவையில்லை” என்றார்.
இந்த வாதங்களை கேட்ட நீதிபதிகள், எப்.ஐ.ஆரை பொது ஆவணம் என்று குறிப்பிட்டனர்.
மேலும், “பத்திரிகையாளர்களிடம் தனிப்பட்ட கேள்விகளை கேட்பது ஏன்?
அவர்கள் மாணவியின் அடையாளங்களை வெளிப்படுத்தினார்களா?
எப்.ஐ.ஆர்-ஐ இணையத்தில் பதிவேற்றம் செய்தது யார்?
ஆவணத்தின் உரிமையாளர் என்ற அடிப்படையில் காவல்துறைதான் இணையத்தில் பதிவு செய்திருக்கிறது. இது யாருடைய தவறு?
பத்திரிகையாளர்களை தவிர வேறு யாருக்கு சம்மன் அனுப்பப்பட்டது?
சம்பந்தப்பட்ட காவல் துறை ஆய்வாளரிடம் விசாரணை நடத்தப்பட்டதா?
எப்.ஐ.ஆர்-ஐ எழுதியவரிடம் விசாரணை நடத்தப்ட்டதா?
பத்திரிகையாளர்களை ஏன் துன்புறுத்துகிறீர்கள்?
செல்போன்களை ஏன் பறிமுதல் செய்ய வேண்டும்? என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர்.
சரியான நபர்களிடம் விசாரணை செய்யாமல் தேவையில்லாமல் நீதிமன்ற நேரத்தை வீணடிக்காதீர்கள் என்று குறிப்பிட்ட நீதிபதிகள், பத்திரிகையாளர்களை விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தக் கூடாது. அவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களை விசாரணைக்கு பின் ஒப்படைக்க வேண்டும். பத்திரிகையாளர்களும் விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்” என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர். anna university fir leak case