கருவாடு வகையில் மிகவும் குறைவான விலையில் கிடைப்பது நெத்திலிக் கருவாடுதான். விலை குறைவு என்பதற்காக இதன் சுவையில் குறைவு இருக்கும் என்று நினைத்துவிடாதீர்கள்.
கைப்பிடி அளவு கொண்ட இந்த நெத்திலிக் கருவாடு வறுவல், ஒரு தட்டு சாதத்தையும் வயிற்றுக்குள் தள்ளும் சுவை கொண்டது. நீங்களும் முயற்சி செய்து பாருங்களேன்…
என்ன தேவை?
நெத்திலி மீன் கருவாடு – கால் கிலோ பெரிய வெங்காயம் – ஒன்று
தக்காளி – ஒன்று
கறிவேப்பிலை – சிறிதளவு
மஞ்சள்தூள் – ஒரு டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – அரை டேபிள்ஸ்பூன்
எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்
சோம்புத்தூள் – ஒரு டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எப்படிச் செய்வது?
வெங்காயம் மற்றும் தக்காளியைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். நெத்திலி மீன் கருவாட்டை அதன் தலைப்பகுதியை நீக்கி விட்டு வெந்நீரில் நன்கு அலசி எடுத்து தனியே வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், நறுக்கிய வெங்காயத்தைச் சேர்க்கவும். வெங்காயம் நிறம் மாற வதங்கியவுடன் கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய தக்காளி, மஞ்சள்தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
அதனுடன் மிளகாய்த்தூள், சோம்புத்தூள் சேர்த்து வதக்கி, சிறிது தண்ணீர் தெளித்து, சுத்தம் செய்து வைத்துள்ள நெத்திலிக் கருவாட்டினை சேர்க்கவும்.
தீயை மிதமாக்கி கருவாடு வெந்ததும் கிரேவி டிரையாகி கருவாட்டோடு சேரும் அளவுக்கு நன்கு வதக்கி இறக்கிப் பரிமாறவும்.