அம்மா உணவகங்கள் நட்டத்தில் இயங்கினாலும்… மேயர் பிரியா முக்கிய அறிவிப்பு!
சென்னையில் அம்மா உணவகங்கள் 786 கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்கி வருவதாக மாமன்றத்தில் கணக்கு குழு தலைவர் தனசேகரன் தகவல் தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகராட்சியின் மாதாந்திர மாமன்ற கூட்டம் இரண்டாவது நாளாக மேயர் பிரியா தலைமையில் இன்று(நவம்பர் 29) காலை 10 மணிக்கு கூடியது.
மறைந்த காங்கிரஸ் மாமன்ற உறுப்பினர் நாஞ்சில் பிரசாத்துக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றி நேற்றைய கூட்டம் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் இரண்டாவது நாளாக மாமன்ற கூட்டம் கூடியது.
அப்போது,
“ஒரு நாளுக்கு 500 ரூபாய்க்கு கீழ் வருமானம் வரும் அம்மா உணவகங்களை உடனடியாக மூட வேண்டும். அம்மா உணவகத்தால் மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது” என்று மாமன்றத்தில் அம்மா உணவகம் செயல்பாடுகள் தொடர்பாக கேள்வி நேரத்தில் உறுப்பினர்கள் தனசேகரன், ஏழுமலை, ராஜா அன்பழகன் உள்ளிட்டோர் தெரிவித்தனர்.
அதற்கு பதிலளித்த மேயர் பிரியா, “அம்மா உணவகம் தொடர்ந்து செயல்பாட்டில் தான் இருக்கும்.
அம்மா உணவகம் தொடங்கியதில் இருந்து எப்படி செயல்பட்டு வருகிறதோ, அவ்வாறே அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்படும்.
பயன்பாட்டில் இல்லாத அம்மா உணவகங்கள் ஆய்வு செய்யப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
அம்மா உணவகங்களில் மாமன்ற உறுப்பினர்கள் பரிந்துரைக்கும் நபர்களை உதவி வருவாய் அலுவலர் மூலம் பரிசீலித்து பணியமர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்று கூறினார்.
கலை.ரா
அதிமுக பொதுக்குழு வழக்கு: உச்சநீதிமன்றத்தில் இன்று நடந்தது என்ன?
ஆடியோவை கசிய விட்டது யார்? அண்ணாமலைக்கு நெருக்கடி தரும் காயத்ரி