தமிழகத்தில் மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் தமிழில் பாடத்திட்டம் அமைக்க தமிழக அரசிற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தின் 75 ஆவது பவள விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று (நவம்பர் 12) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டர்
நிகழ்ச்சியில் அமித்ஷா பேசும்போது, “இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனம் மிகப்பெரிய தொழில் வளர்ச்சி இலக்கை எட்டியுள்ளது. வளர்ச்சி என்பது நாட்டின் கட்டமைப்பை பொறுத்து அளவிடப்படுகிறது. ஏற்றுமதி, கப்பல் துறையில் தங்களது முத்திரையை இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனம் பதித்துள்ளார்கள்.

நம்முடைய நாடு வளர்ச்சிப் பாதையை நோக்கி வலிமையாக பயணித்து வருகிறது. 2025-ஆம் ஆண்டு இந்தியாவின் வளர்ச்சி 5 டிரில்லியன் டாலர் அளவிற்கு இருக்கும். உலக நாடுகளின் வளர்ச்சியில் இந்தியா 11-வது இடத்திலிருந்து 5-வது இடத்திற்கு உயர்ந்துள்ளது.
சமீபத்திய ஆய்வறிக்கையின்படி, 2027- உலக நாடுகளின் பட்டியலில் மூன்றாவது இடத்தை இந்தியா அடைந்திருக்கும். இந்தியாவின் கட்டமைப்பை வலிமையாக்க வேண்டியது முக்கியமாகும்.
மத்திய பாஜக அரசு பல்வேறு துறைகளில் புதிய வாய்ப்புகளை உருவாக்கி வருகிறது. ஆய்வு மற்றும் வளர்ச்சி துறையில் இந்தியா மிக வேகமாக வளர்ந்து வருகிறது. உலக நாடுகளுக்கு இந்தியா கோவிட் காலத்தில் தடுப்பூசிகளை வழங்கியது. 5 லட்சம் மதிப்பீட்டில் கழிப்பறை, வீடில்லாதவர்களுக்கு வீடு, சிலிண்டர் போன்றவற்றை 60 கோடி மக்களுக்கு பாஜக அரசு வழங்கியுள்ளது.
ஊழலற்ற உன்னதமான ஆட்சி பாஜக தலைமையில் நடைபெற்று வருகிறது.
இந்தியாவின் மூலதன செலவினங்கள் 46.8 சதவிகிதமாக உள்ளது. இது தொழில் வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கு முக்கிய பங்காற்றும்.
யுபிஐ மூலமாக வங்கி பரிமாற்றம் 12.11 லட்சம் கோடி அளவிற்கு நடந்துள்ளது. கடந்த ஆண்டு 7 லட்சமாக இருந்த வாகன விற்பனை 21 லட்சமாக உயர்ந்திருக்கிறது.

தமிழகத்தின் மீது பிரதமர் தனிக்கவனம் செலுத்துகிறார். தமிழகத்தில் நிறைவேற்றப்படும் திட்டங்களை பிரதமர் கூர்ந்து கவனித்து வருகிறார். தமிழகத்திற்கான வரி பகிர்மானம் 91 சதவிகிதமாக மத்திய அரசு அதிகரித்துள்ளது.
தேசிய நெடுஞ்சாலைக்காக 8,900 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 64 சாலை திட்டங்களை உருவாக்க, 47 ஆயிரத்து 581 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது
சென்னை மெட்ரோ 2-ஆம் கட்டம் பணிகளுக்காக 3,770 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழ் மிகவும் தொன்மையான மொழி . இந்த நேரத்தில் நான் தமிழக அரசிற்காக விடுக்கும் வேண்டுகோள் என்பது,
மருத்துவ கல்விக்கும், பொறியியல் கல்விக்கும் தமிழில் பாடத்திட்டம் அமைக்க வேண்டும்.” என்றார் அமித்ஷா.
செல்வம்