தமிழக நீதிமன்றங்களில் அண்ணல் அம்பேத்கர் புகைப்படம் அகற்றப்படக்கூடாது என்ற தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு ஏற்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு நீதிமன்றங்களில் காந்தி, வள்ளுவர் படம் தவிர மற்ற தலைவர்களின் படமோ, சிலையோ இடம்பெற கூடாது என்று சென்னை உயர்நீதிமன்ற பதிவாளரின் சுற்றறிக்கை சமீபத்தில் வெளியாகி இருந்தது.
இதற்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் தங்களது கண்டனத்தை தெரிவித்து உத்தரவை திரும்ப பெற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
மேலும் மாநிலம் முழுவதும் நீதிமன்றங்கள் முன்பாக வழக்கறிஞர்கள் சங்கங்கள் சார்பில் போராட்டமும் நடத்தப்பட்டு வந்தன.
இந்த நிலையில் நீதிமன்றங்களில் அம்பேத்கர் புகைப்படம் அகற்றப்படக்கூடாது என்ற தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு ஏற்கப்பட்டுள்ளதாக செய்தி மக்கள் தொடர்புத்துறை இன்று (ஜூலை 24) அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், “நீதிமன்றங்களில் அண்ணல் அம்பேத்கர் புகைப்படம் அகற்றப்படும் என்ற செய்தி பரவியதைத் தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தலின் படி, சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சய் விஜயகுமார் கங்காபூர்வாலா அவர்களைச் சந்தித்து இது குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.
அப்போது தலைமை நீதிபதியிடம் அம்பேத்கர் புகைப்படம் அகற்றப்படக்கூடாது என்ற தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டினை சட்டத்துறை அமைச்சர் கடிதம் வழங்கி நேரில் தெரிவித்தார்.
தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டைக் கேட்டறிந்த தலைமை நீதிபதி, ’நீதிமன்றங்களில் எந்த தலைவர்களின் புகைப்படத்தையும் அகற்ற உத்தரவிடப்படவில்லை. தற்போது உள்ள நடைமுறையே தொடரும்’ எனத் தெரிவித்தார்.
இத்தகவல் வழக்கறிஞர் மன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் தெரிவிக்கப்பட்டது” என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
முதலமைச்சர் கோப்பை: சாம்பியன் கோப்பையை தட்டிச்சென்ற சென்னை அணி!
காவல்நிலையங்களில் ரூ.10 கோடியில் சிறப்பு வசதிகள்!