தமிழக கடல்பரப்பில் சுருக்குமடி வலையை பயன்படுத்த கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
12 நாட்டிக்கல் மைல் தொலைவுக்கு அப்பால் மீன்பிடிப்பதற்காக, தமிழக அரசு கட்டுப்பாட்டில் உள்ள கடற்பரப்பு வழியாக சுருக்குமடி வலையை எடுத்து செல்ல அனுமதி அளித்தது உச்சநீதிமன்றம்
தமிழக கடற்பரப்பில் பவளப்பாறைகள் மற்றும் மீன் குஞ்சுகள் சிக்கிக்கொள்வதால் ‘சுருக்கு மடி வலையை’ கொண்டு மீனவர்கள், மீன் பிடிக்க தடை விதித்து கடந்த 2000ம் ஆண்டு தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.
இந்நிலையில், ‘சுருக்கு மடி வலையை’ கொண்டு மீன் பிடிக்கலாம் என கடந்த 2014ம் ஆண்டு மத்திய அரசு அமைத்த நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளதாகவும்,
எனவே தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள 12 நாட்டிக்கல் மைல் தூரத்துக்குள்ளான கடற்பரப்பிலும் ‘சுருக்கு மடி வலை’யை கொண்டு மீன் பிடிக்க அனுமதிக்கக்கோரி மீனவர் நல சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், சுருக்கு மடி வலைகளை தமிழக கடற்பரப்பில் பயன்படுத்த தடை விதித்ததோடு, தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை உறுதி செய்து உத்தரவிட்டது,
இந்நிலையில் இந்த சுருக்கு மடி வலையை 12 நாட்டிக்கல் மைல் சுற்றளவுக்குள்ளாகவும் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்,
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கடற்பரப்பில் மீன் பிடிப்பதற்காக சுருக்குமடி வலையை எடுத்து செல்ல அனுமதிக்க உத்தரவிட வேண்டும் எனக்கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது
அதேவேளையில், 12 நாட்டிகல் மைலுக்கு அப்பால் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கடல் பகுதிகளில் மீன் பிடிப்பதற்கு சுருக்குமடி வலையை பயன்படுத்தி விட்டு கரை திரும்பும் மீனவர்களை தமிழக அரசு எந்த வித தொந்தரவும் செய்யக்கூடாது என உத்தரவிட வேண்டும் எனக்கோரி இடையீட்டு மனு தாக்கல் செய்தது
இந்த விவகாரத்தில் பதில் அளித்த தமிழ்நாடு அரசு, இயற்கை வளங்களை பேணிக்காக்கவும் பாரம்பரிய மீன்பிடித் தொழிலாளர்களை பாதுகாக்கவும்,
மாநில அரசு தனது அதிகாரத்திற்கு உட்பட்டு தான் இந்த தடை உத்தரவை பிறப்பித்திருப்பதாகவும் இதில் நீதிமன்றம் தலையிட வேண்டியது இல்லை என்றும் கூறியிருந்தது.
அதேவேளையில், சுருக்குமடி வலைக்கு ஆதரவு மீனவர்கள் சார்பில், இந்த வலையை பயன்படுத்துவதால் கடல் வளம், மீன் வளம் அழியும் என்று எந்த தகவலும் இல்லை என மத்திய அரசின் நிபுணர் குழு தெரிவித்துள்ளது. எனவே சுருக்குமடி வலையை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என வாதம் வைக்கப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் இடைக்கால உத்தரவுக்காக வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இன்றைய தினம் இடைக்கால உத்தரவு பிறப்பித்த நீதிபதி ஏ.எஸ் போபண்ணா அமர்வு,
12 நாட்டிக்கல் மைல்களுக்கு அப்பால் சுருக்குமடி வலையை திங்கட்கிழமை மற்றும் வியாழக்கிழமை எடுத்து செல்ல அனுமதியளித்து உத்தரவிட்டனர்.
மேலும், 12 நாட்டிக்கல் மைலுக்கு அப்பால் திங்கட்கிழமை மற்றும் வியாழக்கிழமைகளில் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடிக்கலாம்.
இந்த குறிப்பிட்ட நேரத்துக்குள் சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன் பிடித்து விட்டு படகுகள் கரை திரும்ப வேண்டும்.
மேலும், பதிவு செய்யப்பட்ட படகுகளுக்கு மட்டுமே சுருக்குமடி வலையை எடுத்து செல்ல அனுமதிக்க வேண்டும்.
அதேபோல, இந்த படகுகளை கண்காணிக்க உரிய tracking system பொருத்தியிருக்க வேண்டும்.
மேல் சொன்ன விதிமுறைகளை தவறுபவர்கள் மீது தமிழக அரசு அதன் வரம்புக்குட்பட்டு நடவடிக்கை எடுக்கலாம் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
அதே நேரத்தில் தமிழகத்தில் 12 நாட்டிக்கல் மைலுக்கு உட்பட்ட கடல் பகுதியில் சுருக்கு மடிவலைகளை பயன்படுத்தி மீன்பிடிக்க தடை விதித்த தமிழக அரசாணைக்குள் தற்போதைய நிலையில் நாங்கள் தலையிட விரும்பவில்லை என நீதிபதிகள் தங்களது இடைக்கால உத்தரவில் தெரிவித்தனர்.
இதனால் தமிழ்நாடு அரசின் அரசாணைக்கு எதிரான பிரதான வழக்கின் விசாரணை இன்னும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கலை.ரா