குழந்தைகளை நேரில் பார்க்க அனுமதிக்காவிட்டால் ஜீவனாம்சம் வழங்க தந்தை மறுக்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்ற மனைவியிடம் இருந்து விவாகரத்து கோரி கணவர், சென்னை பூந்தமல்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
ஆனால், திருச்சியில் 11 மாத குழந்தையுடன் வசித்து வருவதால், அங்கிருந்து பூந்தமல்லி வந்து செல்ல முடியாது எனக் கூறி, வழக்கை திருச்சிக்கு மாற்றுமாறு அவரது மனைவி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் இன்று(டிசம்பர் 30)விசாரித்தார். அப்போது, 11 மாத குழந்தையின் செலவுகளுக்கு கணவன் எந்த ஜீவனாம்சமும் தரவில்லை என மனைவி தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், குழந்தையை பார்க்க அனுமதிக்கவில்லை எனவும், அதனால் தன்னால் எப்படி ஜீவனாம்சம் வழங்க முடியும் எனவும், பல் மருத்துவரான மனைவி பூந்தமல்லி வந்து செல்வதில் எந்த பிரச்னையுமில்லை எனவும் கணவன் தரப்பில் வாதிடப்பட்டது.
இரண்டு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, குழந்தையின் கல்வி, வாழ்க்கைக்கு வேண்டிய செலவுகளை மேற்கொள்ள வேண்டியது தந்தையின் கடமை.
கணவரை பிரிந்து வரும் மகளின் குழந்தைகளை கவனிக்க வேண்டிய சுமை தாத்தா – பாட்டிக்கு வந்து விடுகிறது என்று வேதனை தெரிவித்தார்.
குழந்தைகளை கவனிக்க வேண்டிய கடமையில் இருந்து வருவாய் ஈட்டும் தந்தை தப்பிப்பதை பொறுத்துக் கொள்ள முடியாது எனத் தெரிவித்த நீதிபதி,
ஜீவனாம்சம் கோரி மனுத்தாக்கல் செய்யாவிட்டாலும், அதை வழங்கும்படி உத்தரவிட நீதிமன்றங்களுக்கு அதிகாரம் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
குழந்தையை பார்க்க அனுமதிக்கவில்லை என்பதற்காக ஜீவனாம்சம் வழங்க மறுக்க முடியாது எனத் தெரிவித்த நீதிபதி, விவாகரத்து வழக்கை திருச்சிக்கு மாற்றியும், குழந்தைக்கு மாதம் 5 ஆயிரம் இடைக்கால ஜீவனாம்சம் வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.
கலை.ரா
ஆங்சான் சூகிக்கு மேலும் 7 ஆண்டுகள் சிறை!
விருமன் பட பாணியில் காதல் ஜோடி சாகசம்!