நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவான ‘துணிவு’ திரைப்படமும் விஜய் நடித்த ‘வாரிசு’ ஆகிய திரைப்படங்கள் நேற்று வெளியானது.
படம் வெளியான தியேட்டர்கள் முன்பு ரசிகர்கள் பேனர் வைத்தும் அதற்கு பாலாபிஷேகம் செய்தும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர்.
அதில், அஜித் ரசிகரான பரத்குமாரும் ‘துணிவு’ படத்தின் சிறப்பு காட்சியை பார்ப்பதற்காக தனது நண்பர்களுடன் ‘ரோகிணி’ தியேட்டருக்கு சென்றிருந்தார்.
அப்போது பரத்குமார் மற்றும் அவரது நண்பர்கள், அந்த வழியாக சென்ற லாரி மீது ஏறி நின்று ஆட்டம் போட்டனர். பின்னர் பரத்குமார் கீழே இறங்க முயன்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்து விட்டார். இதில் அவரது முதுகு தண்டில் பலத்த காயம் ஏற்பட்டது.
உடனடியாக பரத்குமாரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். நேற்று (ஜனவரி 11 ) அதிகாலை அவர் உயிரிழந்தார்.
பரத்குமார் உடலை பார்த்து அவரது பெற்றோர் மற்றும் நண்பர்கள் கதறி அழுதனர். இந்நிலையில் தமிழக டிஜிபி சைலேந்திர பாபு இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியபோது,
”சினிமா படங்கள் வெளியாகும் பொழுது பாதுகாப்பு இல்லாத காரியங்களில் இளைஞர்கள் ஈடுபடக்கூடாது. இளைஞர்கள் பொறுப்போடு இருக்க வேண்டிய சூழலில் இதுபோன்ற சம்பவத்தால் குடும்பத்தினர் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
வாகனங்களில் ஏறுவது கட் அவுட்டுகள் மீது ஏறுவது மிகவும் ஆபத்தான செயல்கள். இளைஞர்கள் படித்து வேலைக்கு சென்று குடும்பத்தினரை காப்பாற்ற வேண்டும்.
லாரி, கட் அவுட்களில் ஏறி உயிரிழக்கும் போது அந்த குடும்பமே சிரமப்படுகிறது. கொண்டாட்டத்தின்போது இளைஞர்கள் ஆபத்தான செயல்களில் ஈடுபட வேண்டாம் என்றார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்