பள்ளி வகுப்பறையில் திடீரென மயங்கி விழுந்த 9ஆம் வகுப்பு மாணவி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாப்பேட்டை அடுத்த பில்லியப்பா நகரில் உள்ள வள்ளலார் தெருவைச் சேர்ந்தவர் வசந்தகுமார். இவர் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் தோல் மருத்துவராக பணியாற்றி வருகிறார். இவருக்கு காவ்யா மற்றும் ஈஷா அதித்தா என 2 மகள்கள் உள்ளனர்.
இளைய மகள் ஈஷா அதித்தா காவேரிப்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 9ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
நேற்று வழக்கம்போல் பள்ளிக்குச் சென்ற மாணவி ஈஷா, காலை வகுப்பறையில் பாடத்தை கவனித்துக்கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார்.
இதனைக்கண்டு பதறிய பள்ளி ஆசிரியர்கள் முதலுதவி செய்து, உடனடியாக அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து சென்றனர். அங்கு மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
மாணவியின் இறப்பு குறித்து பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்ட நிலையில், அவரது உடலை பெற்றுக்கொண்ட அவர்கள், மருத்துவமனையில் இருந்து இறுதி அஞ்சலிக்காக வீட்டுக்கு கொண்டு சென்றனர்.
இதற்கிடையே மாணவியின் மரணம் தொடர்பாக தகவலறிந்த காவேரிப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
பின்னர் பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தி உயிரிழந்த மாணவியின் உடலை மீட்டு வேலூர் அடுக்கம்பாறை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாராணையில், மாணவிக்கு ஏற்கெனவே இதயகுறைப்பாடு இருந்துள்ளது என்றும், அதன் காரணமாக அவர் தற்போது இறந்திருக்கலாம் என்றும் பெற்றோர் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
கிறிஸ்டோபர் ஜெமா
ஜாமீன் கிடைத்தும் சிறையில் கைதிகள் : நீதிமன்றம் முக்கிய உத்தரவு!