கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் 8 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர்.
கிறிஸ்துமஸ் பண்டிகை நாளை (டிசம்பர் 25) கொண்டாடப்பட உள்ளது. இன்று இரவு 12 மணி முதலே மக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபடத் தொடங்கி விடுவர்.
இந்நிலையில், மக்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையைப் பாதுகாப்பாகவும் அமைதியாகவும் பண்டிகையைக் கொண்டாட மாநகர காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன.
நகை பறிப்பு, செல்போன் பறிப்பு உள்ளிட்ட குற்றங்களைத் தடுக்க சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளது.
பாரிமுனை அந்தோணியார் ஆலயம், அண்ணாசாலை புனித ஜார்ஜ் (கதீட்ரல்) ஆலயம், சைதாப்பேட்டை சின்னமலை ஆலயம் உள்ளிட்ட மக்கள் அதிகம் வரும் கிறிஸ்தவ ஆலயங்களில் சட்டம்- ஒழுங்கு, குற்றப்பிரிவு, போக்குவரத்து உள்ளிட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர்.
பாதுகாப்பு ஏற்பாடுகள் சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜீவால் தலைமையில் செய்யப்பட்டு உள்ளன.
போலீஸ் ரோந்து வாகனங்கள் முக்கியமான பகுதிகளில் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபடவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.
கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி திருட்டு உள்ளிட்ட குற்றங்கள் நடைபெறுவதைத் தடுக்கும் வகையில், குற்றப்பிரிவு போலீசார் சாதாரண உடைகளிலும், மாறுவேடங்களிலும் ரோந்து செல்ல அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
மேலும், மக்கள் அதிகமாகக் கூடும் முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள், ‘டிரோன்’ கேமராக்கள் மூலம் கண்காணிப்பு பணிகள் நடைபெறவுள்ளன.
மக்கள் ஆலயங்களுக்கு செல்லும் போது, கூட்ட நெரிசல் ஏற்படாத வகையில் இன்று இரவு முதல் 2 நாள்களுக்குப் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
மெரினா, சாந்தோம், பெசன்ட் நகர் உள்ளிட்ட கடற்கரைகளுக்குச் செல்லும் பொதுமக்களைக் கடலில் இறங்காதவாறு தடுக்கவும், அறிவுரைகள் வழங்கவும் போலீசார் அங்கு ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர்.
போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுவோர் மீது தக்க நடவடிக்கை எடுக்கவும் போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னையின் முக்கிய சந்திப்புகளில் வாகன சோதனை செய்யப்படுகிறது. சென்னையில் உள்ள 350 கிறிஸ்தவ ஆலயங்களில் போலீசார் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட உள்ளனர். சாந்தோம் ஆலயம், பெசன்ட் நகர் வேளாங்கண்ணி ஆலயத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மோனிஷா
“சி.வி.சண்முகம் இதோட நிறுத்திக்கிட்டா நல்லது” – அமைச்சர் பொன்முடி எச்சரிக்கை!