திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே நேற்று (செப்டம்பர் 11) இரவு நிகழ்ந்த சாலை விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர்.
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டையை சேர்ந்த 45 பேர் தர்மஸ்தலாவிற்கு 2 வேன்களில் ஆன்மிக சுற்றுலா சென்றுள்ளனர். பல்வேறு இடங்களை சுற்றிப் பார்த்துவிட்டு நேற்று இரவு வீடு திரும்பியுள்ளனர்.
அப்போது திருப்பத்தூர் மாவட்டம் நாட்றாம்பள்ளி அருகே வந்து கொண்டிருந்த போது வேனின் பின் டயர் பஞ்சர் ஆகியுள்ளது. இதனால் வேனை சாலையோரத்தில் நிறுத்தி விட்டு ஒட்டுநர் பழுது பார்த்துக் கொண்டிருந்தார்.
அப்போது வேனில் இருந்தவர்கள் கீழே இறங்கி சென்டர் மீடியனில் அமர்ந்துள்ளனர்.
அந்த நேரத்தில் அதிவேகமாக வந்த லாரி ஒன்று சாலையில் நின்று கொண்டிருந்த வேனின் பின்புறத்தில் மோதியது. இதில் வேன் சென்டர் மீடியனில் அமர்ந்திருந்தவர்கள் மீது தூக்கி வீசப்பட்டது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 3 பெண்கள் உட்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தகவல் அறிந்து வந்த போலீசார் மற்றும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்களும் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்தில் 10-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்துள்ள நிலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிலர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சுற்றுலா சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த போது ஏற்பட்ட இந்த கோர விபத்து சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மோனிஷா