அமெரிக்காவில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ஈட்டன் கார்ப்பரேஷன் நிறுவனத்துக்கும் தமிழக அரசுக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.
தமிழ்நாட்டுக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்கா சென்ற முதல்வர் சான் பிரான்சிஸ்கோவைத் தொடர்ந்து தற்போது சிகாகோவில் பயணம் மேற்கொண்டுள்ளார்.
சான்பிரான்சிஸ்கோவில் நோக்கியா, பேபால் உள்ளிட்ட சில நிறுவனங்களுடன் 1300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 4600 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகும் வகையில் ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
இந்நிலையில் நேற்று (செப்டம்பர் 3) சிகாகோ நகரில் ஈட்டன் மற்றும் அஷ்யூரன்ட் நிறுவனங்களுடன் முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன
ஈட்டன் கார்ப்பரேஷன் (Eaton Corporation) நிறுவனம் என்பது தரவு மையம். பயன்பாடு, தொழில்துறை, வணிகம். இயந்திர கட்டிடம். குடியிருப்பு, விண்வெளி மற்றும் இயக்க சந்தைகளுக்கான உற்பத்தி மற்றும் பகிர்மான பணிகளை மேற்கொள்ளும் மேலாண்மை நிறுவனமாகும்.
குடியிருப்பு, வணிக கட்டிடம், மின்சார வாகனங்கள், தரவு மையம் மற்றும் eVTOL வாகனங்களுக்கான ஆற்றல் உற்பத்தி, பரிமாற்றம், விநியோகம் மற்றும் நுகர்வுக்கு அவற்றின் தயாரிப்புகள் பயன்படுத்தப்படுகின்றன.
இந்நிறுவனத்தின் தலைமையகங்கள் அயர்லாந்து நாட்டின் டப்ளின் மற்றும் அமெரிக்க நாட்டின் ஓஹியோவின் பீச்வுட் ஆகிய இடங்களில் அமைந்துள்ளன.
உலகளவில் 35 நாடுகளில் சுமார் 208 இடங்களில் உற்பத்தி வசதிகள் கொண்ட பார்ச்சூன் 500 நிறுவனங்களில் ஒன்றாகும்.
இந்நிலையில் ஈட்டன் நிறுவனத்திற்கும் தமிழ்நாடு அரசிற்கும் இடையே, 200 கோடி ரூபாய் முதலீட்டில், 500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் சென்னையில் தற்போதுள்ள ஈட்டன் நிறுவனத்தின் உற்பத்தி வசதியை விரிவாக்குவதுடன், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, உலகளாவிய பயன்பாட்டு பொறியியல் மையத்தை (Global Utility Engineering Centre) நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
இதைத்தொடர்ந்து, அஷ்யூரண்ட் நிறுவனத்தின் இந்தியாவின் முதல் உலகளாவிய திறன் மையத்தை (GCC) சென்னையில் நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா