காஞ்சிபுரம் மாவட்டம் படப்பையில் உள்ள ஜூஸ் கடையில் ஓசியில் சாக்லேட், ஜூஸ், பிரட் ஆம்லெட் கேட்டு தகராறு செய்ததாக மகளிர் காவல் ஆய்வாளர் உள்பட 4 பெண் காவலர்களை பணியிடை நீக்கம் செய்து தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் இன்று(ஜூன் 7) உத்தரவிட்டுள்ளார்.
சென்னை கூடுவாஞ்சேரியில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் விஜயலட்சுமி. இவர் அதே காவல் நிலையத்தில் பணிபுரியும் பெண் காவலர்கள் மூன்று பேருடன் கடந்த ஜூன் 4 ஆம் தேதி இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது அதே பகுதியில் உள்ள ஜூஸ் கடைக்கு 4 பேரும் சென்று ஜூஸ், பிரட் ஆம்லெட், சாக்லேட், தண்ணீர் கேன் ஆகியவற்றை வாங்கியுள்ளனர்.
அப்போது கடைக்காரர் வாங்கிய பொருளுக்கு பணம் கொடுங்கள் என்று கேட்டுள்ளார்.. அதற்கு பெண் காவலர்கள் 4 பேரும் ஓசியில் தருமாறு கேட்டுள்ளனர்,
அதற்கு அந்த கடைக்காரர் கொடுக்க மறுத்ததை அடுத்து அவர்கள் 4 பேரும் தகராறு செய்துள்ளனர்.
மேலும் கடையை எப்படி நடத்துகிறாய் என்று பார்க்கிறோம் என்று கூறி உரிமத்தை ரத்து செய்வதாக மிரட்டியுள்ளனராம். இது குறித்து கடையின் உரிமையாளர் மணிமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அதன் அடிப்படையில் அங்கு பதிவான சிசிடிவி காட்சிகளை வைத்து தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் ஆய்வு செய்தார்.
அப்போது கடைக்காரர் சொல்வது உண்மை என தெரியவந்ததை அடுத்து ஜூஸ் கடையில் தகராறு செய்ததாக விஜயலட்சுமி உள்பட 4 பெண் காவலர்களையும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
இவர்கள் மீது தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து வந்த நிலையில் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாக போலீஸ் வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
தாமதமாகும் குரூப் 4 கலந்தாய்வு: எடப்பாடி கேள்வி!