சென்னையில் ஏற்கனவே ரயில் நிலையங்களில் பாதுகாப்பு குறைபாடு என்கிற குற்றச்சாட்டு உள்ளது. இந்த நிலையில், ஆவடி இந்து கல்லூரி ரயில் நிலையத்துக்குள் இன்று மூன்று போதை இளைஞர்கள் கையில் கம்புடன் நுழைந்தனர்.
பின்னர், ரயில் நிலையத்தில் இருந்தவர்களை எல்லாம் கையில் வைத்திருந்த கம்பால் அடித்தனர். அங்கிருந்த முதியவர், செல்போன் பார்த்துக் கொண்டிருந்த நபர் , எதிரே வந்தவர்கள் அனைவரையும் அடித்தனர். இதனால், அங்கிருந்த மக்கள் பயந்து போனார்கள். யாரும் அவர்களை தட்டி கேட்கவும் முடியவில்லை.
ரயில் நிலையத்தில் ரயில் பாதுகாப்பு படையினர் இருந்தார்களா? என்பதும் தெரியவில்லை. இந்த போதை இளைஞர்கள் தாக்கியதில் முதியவர் ஒருவருக்கு முகமெல்லாம் ரத்தம் வழிந்து காணப்பட்டது.
இதைக்கண்டு சக பயணிகள் ரத்த வெள்ளத்தில் இருந்த முதியவரை ஆசுவாசப்படுத்தினர். அந்த முதியவர் தமிழக மின்வாரியத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். வேலைக்கு செல்ல காத்திருந்தவர் போதை ஆசாமிகளின் கண்களில் பட்டுள்ளார். ஏன் எதற்கு என்றே தெரியாமல் அந்த முதியவரை போதை இளைஞர்கள் தாக்கியுள்ளனர். தற்போது, அந்த முதியவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
ரயில் நிலையத்தில் இளைஞர்கள் செய்த அட்டூழியம் தொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, ரயில்வே பாதுகாப்புப் படையினர் அப்பாவி மக்கள் மீது தாக்குதலில் ஈடுபட்ட 3 பேரை கைது செய்தனர். அதில், ஒருவர் மைனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து, அவர்களிடத்தில் ரயில்வே பாதுகாப்புப் படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
தமிழ்நாடு போலீஸை சிறைபிடித்த புதுச்சேரி சாராயக்கடை ஊழியர்கள்! – நடந்தது என்ன?
ஒரு சவரன் தங்கம் ரூ.960 குறைந்தது… இந்த சான்ஸ மிஸ் பண்ணாதீங்க மக்களே!