விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் மற்றும் நீர்நிலைகளில் சிலைகளைக் கரைப்பதை முன்னிட்டு சென்னையில் 20 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர்.
விநாயகர் சதுர்த்தி வருகின்ற ஆகஸ்ட் 31 ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக விநாயகர் சதுர்த்தி விழா பெரிதளவில் கொண்டாட்டம் ஏதுவுமின்றி நடைபெற்றது.
எனவே இந்த ஆண்டு சிறப்பான கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நடந்து வருகிறது.

நாடு முழுவதும் விநாயகர் சிலைகள் தயாரிப்பு, அலங்கார பொருட்கள் தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
இதனைத் தொடர்ந்து நீர்நிலைகளில் சிலைகளைக் கரைப்பது குறித்த வழிமுறைகளை மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டது.
களிமண்ணால் செய்யப்பட்ட சிலைகள், சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படுத்தாத மூலப்பொருட்களால் செய்யப்படும் விநாயகர் சிலைகளை மட்டும்தான் நீர்நிலைகளில் கரைக்க வேண்டும் என்று கூறியுள்ளது.
மேலும், ஆபரணங்கள் தயாரிப்பதற்கு உலர்ந்த மலர்கள், வைக்கோல், மரங்களின் இயற்கை பிசினை மட்டும் தான் பயன்படுத்த வேண்டும்.
சிலைகளுக்கு வண்ணம் தீட்டுவதற்குச் செயற்கை ரசாயன வண்ணங்களைப் பயன்படுத்தக் கூடாது என்றும் மாசுக்கட்டுப்பாடு வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

செப்டம்பர் 4 ஆம் தேதி சென்னையில் காசிமேடு, பட்டினப்பாக்கம், எலியட்ஸ் கடற்கரை, திருவான்மியூர் ஆகிய இடங்களில் சிலைகளைக் கரைப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடற்கரை பகுதிகளில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் பாதுகாப்பு காரணம் கருதி சென்னையில் 20 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
மோனிஷா
கலப்பு திருமணம் செய்தவர்கள் கோவில் திருவிழாவில் மறுப்பு: நீதிமன்றம் அதிரடி உத்தரவு!