கேரளாவில் தமிழகப் பெண் உட்பட 2 பேரை நரபலி கொடுத்தவர்கள், அந்த பெண்களின் மாமிசத்தை உண்டதாக திடுக்கிடும் தகவல்களை வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர்.
தர்மபுரியைச் சேர்ந்தவர் பத்மா. கணவருடன் கடந்த 15 ஆண்டுகளாக கேரள மாநிலம் கொச்சியில் லாட்டரி வியாபாரம் செய்து வந்தார்.
தினமும் தர்மபுரியில் உள்ள தனது மகனிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசும் பத்மா, செப்டம்பர் 26 ஆம் தேதி முதல் போனில் தொடர்பு கொள்ளவில்லை.
இதனால் சந்தேகம் அடைந்த அவரது மகன் கொச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார் பத்மாவின் செல்போன் கடைசியாக கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டம் திருவாழா என்ற இடத்தில் ஸ்விட்ச் ஆஃப் ஆகி இருப்பதை கண்டறிந்தனர்.
அந்த பகுதிக்கு சென்று காவல் துறையினரும் பத்மாவின் உறவினர்களும் தேடியும் எந்த தடயமும் கிடைக்கவில்லை.
சந்தேகத்தின் பேரில் கொச்சியை சேர்ந்த ஷஃபி என்கிற ரஷீத் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தியபோது, பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தது.
பத்மா மற்றும் கேரளா காலடியில் வசித்து வந்த ரோஸ்லி ஆகிய இரண்டு பெண்களை வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி அழைத்துச் சென்று, மசாஜ் சென்டர் நடத்தி வரும் பகத்சிங் என்பவரின் வீட்டில் நரபலி கொடுத்தது தெரியவந்தது.
ரோஸ்லியும் கேரளாவில் லாட்டரி விற்கும் தொழில் செய்து வந்துள்ளார்.
ரஷீது தான் ஒரு சித்தர் என்றும் தனக்கு அபூர்வமான சக்தி உள்ளதாகவும் பெண்களை அழைத்து வந்து நரபலி கொடுத்தால் சகல விதமான ஐஸ்வர்யங்கள் மற்றும் பொன் பொருள் சேரும் என்றும் பகத்சிங்கிடம் கூறியிருக்கிறார்.
இதனால் பணக்காரர்களாக ஆசைப்பட்ட பகத்சிங்கும் அவரது மனைவி லைலாவும் ரஷீத்துடன் சேர்ந்து நரபலி கொடுத்துள்ளனர்.
ரஷீத், பகத்சிங், லைலா ஆகிய 3 பேரையும் கைது செய்த கொச்சி போலீசார், ரஷீத் கொடுத்த தகவலின் பெயரில், வெவ்வேறு இடங்களில் புதைக்கப்பட்ட 2 பெண்களின் உடல்களை தோண்டி எடுத்தனர்.
இதையடுத்து அவர்கள் 3 பேரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
அதில் நரபலி கொடுக்கப்பட்ட இரண்டு பெண்களையும், கை, கால்களை கட்டி சித்ரவதை செய்து பின் நரபலி கொடுத்திருக்கின்றனர். நரபலி கொடுக்கப்பட்ட பிறகு அவர்களின் ரத்தத்தை ஒரு பாத்திரத்தில் எடுத்து வீடு முழுவதும் தெளித்தும் உள்ளனர்.
இதற்கு எல்லாம் ஒருபடி மேலாக அவர்கள் கூறியிருப்பது நெஞ்சை பதற வைப்பதாக இருக்கிறது. நரபலி கொடுத்தவர்களின் மாமிசத்தை உண்டதாக லைலாவும், பகத்சிங்கும் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
கைதாகியுள்ள மந்திரவாதி ரஷீத், ஏற்கனவே 2020 ஆம் ஆண்டு பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டவர். 75 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்ததாக அவர் கைது செய்யப்பட்டது தெரியவந்திருக்கிறது.
கைது செய்யப்பட்ட 3 பேரும் எர்ணாகுளம் மாவட்ட நீதிமன்றத்தில் இன்று (அக்டோபர் 12)ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை அக்டோபர் 26 ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ரஷீத் இதுபோன்ற வேறு சில பெண்களையும் நரபலி கொடுத்திருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளதால் இந்த வழக்கில் பல திருப்புமுனைகள் வரலாம் என்று கொச்சி காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கலை.ரா
‘நீங்கள் ஒரு தேவதை’ : ஆட்சியருக்கு ஐஸ் வைத்து லீவ் கேட்ட மாணவர்கள்!
‘நேரத்தை வீணடிக்க வேண்டாம்’: பணமதிப்பழிப்பு வழக்கில் மத்திய அரசு!