ஆர்.பி.வி.எஸ் மணியனுக்கு 14 நாட்கள் சிறை!

Published On:

| By Monisha

14 jail for RBVS maniyan

அம்பேத்கர் குறித்து அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்ட ஆன்மிக சொற்பொழிவாளர் ஆர்.பி.வி.எஸ் மணியனுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் சமீபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் திருவள்ளுவர், அம்பேத்கர், திராவிட இயக்க அறிஞர்கள் குறித்து ஒருமையில் இழிவாகவும், அவதூறாகவும் விமர்சித்துப் பேசியிருந்தார் இந்துத்துவ சிந்தனையாளரும், ஆன்மிக சொற்பொழிவாளருமான ஆர்.பி.வி.எஸ் மணியன்.

அவருடைய பேச்சு சமூக வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். விசிக தலைவர் திருமாவளவனும் கண்டனங்களை பதிவு செய்திருந்தார்.

தொடர்ந்து இதன் காரணமாக அவர் மீது சென்னை தியாகராயர் நகர் காவல்நிலையத்தில் வி.சி.க. முன்னாள் மாவட்டச் செயலாளர் செல்வம் புகார் அளித்திருந்தார்.

இந்நிலையில் ஆர்.பி.வி.எஸ் மணியனை தி.நகரில் உள்ள அவரது வீட்டில் வைத்து இன்று (செப்டம்பர் 14) அதிகாலை 3.30 மணியளவில் சென்னை தெற்கு இணை ஆணையர் தலைமையிலான தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

அவரிடம் விசாரணை மேற்கொண்ட போலீசார் தொடர்ந்து, சென்னை முதன்மை அமர்வு நீதிபதி அல்லி முன்பு ஆஜர்படுத்தினர்.

அப்போது ஆர்.பி.வி.எஸ். மணியன், “நான் பேசியது தவறாக புரிந்துகொள்ளப்பட்டது. எனக்கு நீரிழிவு மற்றும் ரத்த அழுத்தம், சிறுநீர் தொற்று உள்ளிட்ட பிரச்சனைகள் உள்ளன. மேலும், என் முதுமையை கருத்தில் கொண்டு என்னை விடுவிக்க வேண்டும். ஒருவேளை காவல் உறுதி செய்யப்பட்டால் தனியார் மருத்துவமனை மூலம் சிகிச்சை அளிக்க வேண்டும்” என்று நீதிபதியிடம் கோரினார்.

இதனைக் கேட்ட நீதிபதி அல்லி, இது குறித்து பின்னர் பரிசீலிக்கப்படும் என்று கூறி 14 நாட்கள் (செப்டம்பர் 27 வரை) நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

மோனிஷா

ரகுமான் இசை நிகழ்ச்சிக்கு கேளிக்கை வரி:  சென்னை மாநகராட்சி நோட்டீஸ்! 

இந்திய மாணவி பலி: கேலி பேசிய அமெரிக்க போலீசாரிடம் விசாரணை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel