தமிழக அரசு இந்த ஆண்டு ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 வரை 61 நாட்களுக்கு விசைப்படகு மற்றும் இழுவைப்படகு மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்ல தடை விதித்துள்ள நிலையில் சேலம் மீன் மார்க்கெட்டில் சடலங்கள் கெடாமல் இருக்க பயன்படுத்தப்படும் ரசாயனம் கலக்கப்பட்ட 130 கிலோ மீன்களை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம், சூரமங்கலம் பகுதியில் மீன் சந்தை இயங்கி வருகிறது. இங்கு ஏராளமான மீன் கடைகள் உள்ளன. கடல் மீன், ஆற்று மீன்கள் உள்ளிட்ட பல்வேறு ரக மீன்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
தற்போது தமிழக அரசு, கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்ல தடை விதித்துள்ள நிலையில் இங்கு விற்பனை செய்யும் மீன்கள் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்க வேண்டி, ரசாயனம் கலந்து, விற்பனை செய்யப்படுவதாக, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சூரமங்கலம் மீன் மார்க்கெட்டுக்கு சென்று, அங்குள்ள கடைகளில் சோதனை நடத்தினர்.
அங்கு தடை செய்யப்பட்ட ஃபார்மாலின் ரசாயனம் கலக்கப்பட்ட மீன்கள் விற்பனை செய்வதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இந்த ஃபார்மாலின் ரசாயனமானது ஆய்வகத்தில் இறந்த உடல்களை பதப்படுத்துவதற்கு பயன்படுத்துவதாகும்.
மீன்களில் ஃபார்மலின் ரசாயனம் கலப்பது மட்டுமல்லாமல் மீன்களைப் பதப்படுத்த ஐஸ்கட்டி தயாரிக்கும் தண்ணீரில் ஃபார்மலின் ரசாயனத்தை கலந்து, ஐஸ்கட்டிகள் உருவாக்கி, அதன் மூலமும் மீன்களை பதப்படுத்தி வந்ததும் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
மீன்களில் இதை உபயோகித்தால் அந்த மீன்களை சாப்பிடுவோருக்கு பல்வேறு நோய்கள் ஏற்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
மீன் மார்க்கெட்டில் இருந்து ஃபார்மலின் ரசாயனம் கலக்கப்பட்ட 130 கிலோ மீன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து, தொடர்ந்து விசராணை நடத்தி வருகின்றனர்.
ராஜ்
’என் மனம் உடைந்துவிட்டது’: மனோபாலா மறைவால் தேம்பி அழுத ராதிகா
ஆடியோ சர்ச்சைக்குப் பிறகு பிடிஆர் ஏறும் கட்சி மேடை!