சென்னையில் மர்மக் காய்ச்சலால் சிறுமி உயிரிழப்பு!
சென்னை மதுரவாயலை சேர்ந்த பூஜா என்ற 13 வயது சிறுமி காய்ச்சலுக்குச் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (அக்டோபர் 1) மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மதுரவாயலை சேர்ந்த செந்தில்-சுஜிதா ஆகியோரின் மூத்த மகள் பூஜா விருகம்பாக்கம் அரசுப் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
கடந்த மூன்று நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த சிறுமி கீழ்பாக்கத்தில் உள்ள கேஎம்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
ஆனால், சிகிச்சை பலனின்றி நேற்று மாலை உயிரிழந்தார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் மருத்துவமனையில் விளக்கம் கேட்டுள்ளனர். அதற்கு, மர்மக்காய்ச்சலால் சிறுமி உயிரிழந்ததாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
![13 year old girl died for unknown fever in Chennai](https://storage.googleapis.com/minnambalam_bucket/minnambalam.com/wp-content/uploads/Screenshot-175.jpg)
உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றும், தங்கள் மகளுக்கு ஏற்பட்ட காய்ச்சல் டெங்குவா, பன்றிக் காய்ச்சலா, வைரஸ் காய்ச்சலா என்ற விவரங்களை மருத்துவமனை தெரிவிக்கவில்லை என்றும் சிறுமியின் பெற்றோர் குற்றம்சாட்டுகின்றனர்.
மேலும் அப்பகுதியில், சிறுமிக்கு ஏற்பட்ட காய்ச்சல் போல் சிலருக்குக் காய்ச்சல் அறிகுறிகள் இருப்பதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே சுகாதாரத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து, மாநகராட்சி சார்பில் குப்பைகளைச் சுத்தம் செய்தல், கொசு மருந்து அடித்தல் போன்ற பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
மர்மக் காய்ச்சலால் சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடம் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாகவே டெங்கு, எச்1என்1 வைரஸ், பன்றிக் காய்ச்சல் ஆக்கியவற்றால் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதில் குழந்தைகள் அதிகளவு பாதிக்கப்பட்டிருந்தார்கள்.
இந்த காய்ச்சல் பருவ மாற்றத்தால் ஏற்படக்கூடியவை என்றும் இதனால் மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் சுகாதாரத்துறை மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மோனிஷா
டிஜிட்டல் திண்ணை: ஒரு கோடி வாக்குகள் – சீமான் டார்கெட்!
கால்பந்து போட்டி கலவரம்: பலி எண்ணிக்கை 174 ஆக அதிகரிப்பு!